நீதிபதி சுவாமிநாதன் ஆய்வின் போது! திருப்பரங்குன்றம் மலையில் டிரோன் பறந்ததால் ஷாக்! யூடியூபர் கைது
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீப வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு மேற்கொண்டிருந்த போது டிரோன் பறக்கவிட்டதாக யூடியூபர் மணி என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை தீபம்தான்.

இந்த அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவையொட்டி மலை மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே மண் சரிந்து விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த முறை மண்ணின் ஸ்திரத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது.
அந்த வகையில் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற்றப்படும் மகா தீபமும் பெயர் பெற்றது. இந்த கோயிலில் அண்மைக்காலமாக உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுகிறது.
ஆனால் பாரம்பரியமாக ஏற்றப்படும் தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமரவிக்குமார் என்பவர் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன் மீதான விசாரணை நடந்தது. அந்த மனுவில் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு சட்ட ரீதியாக தடை எதுவும் இல்லை. பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எனவே பாரம்பரியத்தை காக்க தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இரு தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா நிர்வாகத்தை எதிர்மனுதாரர்களாக சேர்த்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது" என்றார்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் இடத்தை நீதிபதி சுவாமிநாதன், நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு படிக்கட்டுகளில் ஏறிச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சில இடங்களில் அமர்ந்தும் நீதிபதி ஆலோசனை நடத்தியிருந்தார்.
நீதிபதி சுவாமிநாதன் ஆய்வு மேற்கொண்டிருந்த போது அங்கு திடீரென ஒரு டிரோன் பறந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து விசாரணையில் "மிஸ்டர் பிளைட்" எனும் யூடியூப் சேனலை நடத்தி வரும் மணி என்பவருடையது என தெரியவந்தது.
விசாரணையில் அவர் பழங்காநத்தத்தை சேர்ந்தவர் என்றும் யூடியூப் சேனலை பிரபலப்படுத்த புதிதாக டிரோன் வாங்கி கோயிலினன் முன்பு பரிசோதனை செய்ததாக தெரிவித்திருந்தார். எனினும் அவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ 3 லட்சம் மதிப்பிலான டிரோனை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications