சிக்கன் குழம்பால் படுகொலை.. விபரீதமான சிறு சண்டை.. பெற்ற மகனையே அடித்து கொன்ற தந்தை! கொடூரம்
மங்களூரு: கர்நாடக மாநிலத்தில் குடும்ப சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது. சிக்கன் குழம்பு இல்லை என்று ஆரம்பித்த சண்டையில் ஒரு கொலையே நடந்துள்ளது.
குடும்பத்தில் சண்டை வருவது இயல்பான ஒன்று தான். ஆனால், சில நேரங்களில் அவை கையை மீறிச் சென்றுவிடும் ஆபத்தும் இருக்கவே செய்கிறது. கோபத்தில் நாம் செய்யும் காரியங்கள் நமக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்துள்ளது.

சிக்கன் குழம்பு நன்றாக இல்லை என்று எழுந்த சிறு குடும்ப சண்டை கொலையில் சென்று முடிந்துள்ளது. இதனால் தான் பெற்ற மகனையே கொன்றுள்ளார் அவரது தந்தை. இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் தான் அரங்கேறியுள்ளது. அங்கே, வீட்டில் செய்த உணவைச் சுவையாக இல்லை என்று சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த தந்தை அங்கே இருந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து அடித்துள்ளார். இந்த மோசமான சம்பவத்தில் 32 வயதான அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தக்ஷின கன்னடா மாவட்டத்தின் சுல்லியா அடுத்துள்ள குட்டிகர் என்ற இடத்தில் நடந்துள்ளது.
சிக்கன் குழம்பு
இதில் கொலை செய்யப்பட்ட நபர் 32 வயதான சிவராம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வீட்டில் சிக்கன் சாப்பிடுவது தொடர்பான பிரச்சினையில் அவரது தந்தை ஷீனாவுடன் முதலில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அது ஒரு கட்டத்தில் கை கலப்பாக மாறியிருக்கிறது. அப்போது அவரது தந்தை அருகே இருந்த மரக்கட்டையை எடுத்துத் தாக்கியதில் தான் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவர்கள் வீட்டில் அன்று சிக்கன் எடுத்துச் சமைத்துள்ளனர். இருப்பினும், இரவு சிவராம் வீட்டிற்கு வந்தபோது குழம்பில் சிக்கன் இல்லை. அவரது தந்தையே குழம்பில் இருந்த அத்தனை சிக்கனையும் சாப்பிட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவராம் அவரது தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

கொலை
இதனால் கடும் கோபமடைந்த தந்தை ஷீனா பதிலுக்கு திட்டியுள்ளார். சிறிது நேரத்திலேயே இது கைகலப்பாக மாறியது. அது அப்படியே அடிதடியில் சென்று முடிந்தது. ஆத்திரத்தில் ஷீனா அங்கே இருந்த கூர்மையான மரக் கட்டையை எடுத்து தனது மகனின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் அலறியபடி அவர் அங்கே சரிந்துள்ளார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கே விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், அவரை கடப்பா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷீனாவை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட சிவராமுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications