அதிகரிக்கும் கொரோனா: மகாராஷ்டிராவில் தியேட்டர்களில், தனியார் அலுவலகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் அங்குள்ள தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கி விட்டது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு 15,00-க்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு 30,000-ஐ நெருங்கும் நிலைக்கு வந்து விட்டது. மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் நாட்டின் மொத்த பாதிப்பில் 86% பதிவாகி உள்ளது.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் உச்சக்கட்ட பாதிப்பு உள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு 10,000-க்குள் இருந்த பாதிப்புகள் தற்போது இந்த ஆண்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 25,833 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது இந்தியாவின் மொத்த பாதிப்பில் 65 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மகாராஷ்டிரா அரசு. இது தொடர்பாக அந்த மாநில அரசு வெளியிட்ட வழிமுறைகள் பின்வருமாறு:-
* மகாராஷ்டிராவில் உள்ள ஆடிட்டோரியங்கள் மற்றும் தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளார்கள் உடன் மட்டுமே இயங்க வேண்டும்.
* தனியார் அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதி செய்யப்பட்ட வேண்டும்.
* சினிமா ஒளிபரப்புவதை தவிர, எந்தவொரு மத, சமூக, அரசியல் அல்லது கலாச்சாரக் கூட்டங்களுக்கும் தியேட்டர்கள் மற்றும் ஆடிட்டோரியங்களை பயன்படுத்த கூடாது.
* நிறுவனங்கள், தியேட்டர்கள் மற்றும் ஆடிட்டோரியங்களுக்கு வருபவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
* இதில் காய்ச்சல் உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்
* உற்பத்தித் துறை முழு திறனுடன் செயல்பட அனுமதி உண்டு
* இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 31 வரை அமலில் இருக்கும்












Click it and Unblock the Notifications