75 கி.மீ தூரம் சாலையை வெறும் 105 மணி நேரத்தில் அமைத்து அசத்திய இந்தியா.. கின்னஸ் சாதனை!
மும்பை: 75 கிலோ மீட்டர் சாலையை 105 மணி நேரத்துக்கு அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனையை படைத்து இருக்கிறது.
இந்தியாவின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 75 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சாலை 105 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனை படைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டது.
இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியிலிருந்து அகோலா நகர் வரை NH 53 தேசிய நெடுஞ்சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் தங்களுடன் இணைந்து பணியாற்ற ராஜ்பாத் இன்ப்ராகான் என்ற தனியார் ஒப்பந்ததாரரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தேர்ந்தெடுத்தது.
திட்டமிட்டடி கடந்த ஜூன் 4 ஆம் தேதி காலை 6 மணிக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பார்க்காமல் குறித்த நேரத்துக்குள் சாலையை அமைக்க வேண்டும் என்று முழு மூச்சுடன் பணியாற்றினர். தொழிலாளர்களின் கடின உழைப்பாலும் நேர்த்தியான திட்டமிடல் காரணமாகவும் நேற்று இந்த பணிகள் நிறைவடைந்தன.
அதன்படி வெறும் 105 மணிநேரம் 33 நிமிடங்களுக்கு உள்ளாக 75 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நெடுஞ்சாலை அமராவதி முதல் அகோலா நகர் வரை அமைக்கப்பட்டது. இதனை உலக சாதனையாக அங்கீகரித்த கின்னஸ் நிறுவனம் சான்றிதழையும் வழங்கி கவுரவித்து இருக்கின்றது.
கொல்கத்தா, ராய்பூர், சூரத், நாக்பூர், அகோலா, துலே உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையை சுற்றிலும் கனிம வளம் நிறைந்த பகுதிகள் உள்ளன.