பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த வெடி விபத்து.. தீயில் கருகி 8 பேர் பலியான சோகம்! மகாராஷ்டிராவில் ஷாக்
மும்பை: மகாராஷ்டிராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 60 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவிலியில் உள்ள ரசாயன ஆலையின், கொதிகலனில் இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதனால், ஆலை முழுவதும் தீ பரவியிருக்கிறது. இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில்,

"டோம்பிவிலி எம்ஐடிசி (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்) வளாகத்தின் 2-ம் கட்ட இரசாயன தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 4 கொதிகலன்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொழிற்சாலை மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள வீடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன. வெடி சத்தம் ஒரு கி.மீ தூரம் வரை கேட்டிருக்கிறது. நேற்று மதியம் 1.40 மணியளவில் இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். வெடி விபத்தின்போது தீ பரவியது பேரழிவை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கிறது.
அதேபோல கரும்புகை மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கவும் 8 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன" என்று கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள மகாராஷ்டிரா து.முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்த சம்பவம் துயரமானது என்றும் தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் சிக்கியிருந்த 8 பேரை பத்திரமாக மீட்டனர் என்றும் கூறியுள்ளார்.
"காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நான் தானே கலெக்டருடன் இது தொடர்பான ஆலோசனை நடத்தினேன். தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்" என்று அவர் X சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மகாராஷ்டிர பொதுப்பணித்துறை அமைச்சரும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். விபத்து காரணமாக மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வெடி விபத்து மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications