பல லட்சம் இன்சூரன்ஸ் தொகையை போராடி வென்ற 83 வயது முதியவர்.. காப்பீடு எடுப்பவர்கள் அறிய வேண்டிய பாடம்
மும்பை: மும்பையை சேர்ந்த 83 வயது தொழில் அதிபர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அவருக்கும், அவரது மனைவிக்கும் மருத்துவ காப்பீடு செய்து இருந்தார். புற்றுநோய் சிகிச்சைக்கு செலவான ரூ.17¾ லட்சத்தை கேட்டு அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறையிட்டார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்துவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த மும்பை உயர்நீதிமன்றம், புற்றுநோய்க்கும், மதுபழக்கத்துக்கும் தொடர்பில்லை என தீர்ப்பு அளித்துள்ளது.
காப்பீடு விவகாரத்தில் பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. என்னதான் காப்பீடு பணம் கட்டினாலும், ஏதாவது சொத்தையான காரணத்தை சொல்லி பணத்தை தராமல் சில காப்பீடு நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன.சில காப்பீடு நிறுவனங்கள் பல்வேறு நிபந்தனைகளை கூறி பணத்தை தர மறுக்கின்றன. இதனால் காப்பீடு எடுத்தவர்கள் பணத்தை பெறுவதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படித்தான் 83 வயது முதியவர் புற்றுநோய் சிகிச்சைக்கான பணதை காப்பீடு நிறுவனத்திடம் பெற கோர்ட்டை நாடினார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.

மும்பையை சேர்ந்த 83 வயது தொழில் அதிபர் ஒருவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அவருக்கும், அவரது மனைவிக்கும் மருத்துவ காப்பீடு செய்திருக்கிறார். 2003-ம் ஆண்டு முதல் காப்பீடை ஆண்டு தோறும் புதுப்பித்தும் வந்துள்ளார். ரூ.50 லட்சம் காப்பீடு தொகை பெறும் வகையில் அவர் ரூ.13.27 லட்சம் காப்பீடு பிரீமியம் செலுத்தியிருக்கிறார்.
2022-ம் ஆண்டு அவருக்கு வயிற்றில் புற்று நோய் கட்டி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. எனவே அவர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றார். புற்றுநோய் சிகிச்சைக்கு செலவான ரூ.17¾ லட்சத்தை கேட்டு அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறையிட்டார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் அவர் மதுகுடித்ததால் தான் புற்றுநோய் ஏற்பட்டதாக கூறி காப்பீடு தொகையை தர மறுத்துவிட்டது. காப்பீடு தீர்ப்பாயமும் தொழில் அதிபருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தொகையை வழங்க உத்தரவிட மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து தொழில் அதிபர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சந்தீப் மானே புற்றுநோய்க்கும், மதுபழக்கத்துக்கும் தொடர்பில்லை என்று கூறினார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில், "மனுதாரர் எப்போதாவது மது குடிப்பதால் தான் புற்று நோய் ஏற்பட்டு அவர் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. எனவே அவர் எப்போதாவது மது குடிப்பது காப்பீடை நிராகரிக்க காரணமாக இருக்க முடியாது" என கூறி மதுபழக்கத்தை காரணம் காட்டி தொழில் அதிபர் புற்றுநோய் சிகிச்சைக்கு செலவு செய்த ரூ.17¾ லட்சத்தை வழங்க வேண்டாம் என்ற காப்பீடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்தார்.












Click it and Unblock the Notifications