முன்னாள் பெண் ஐஏஎஸ் அதிகாரி உள்பட குடும்பத்திற்கே அல்வா கொடுத்த வேலைக்காரர்.. ஆடிப்போன குடும்பம்
மும்பை: முன்னாள் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேட்கர் மகாராஷ்டிரா மாநிலம் புனே பனேர் ரோட்டில் வசித்து வருகிறார். இவருடன் அவரது தந்தை திலீப் கேட்கர், தாய் மனோரமா கேட்கர் வசித்து வந்தனர். பூஜா கேட்கர் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் அவர் பூஜா கேட்கர் மற்றும் குடும்பத்தினருக்கு மயக்க மருந்து கொடுத்து வீட்டில் இருந்த பொருட்களை அவர் திருடி சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த திலீப் கேட்கர், மனோரமா கேட்கர் ஆகியோரின் மகள் பூஜா கேட்கர். இவர் ஐஏஎஸ் ஆக தேர்வாகி மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். இவர் பணியில் சேர்ந்தபோது பயிற்சி ஐஏஎஸ் ஆக பணியாற்றினார். அப்போது பூஜாவின் நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

குறிப்பாக பயிற்சி அதிகாரியாக இருந்தபோதே அவர் செய்த சில செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தனது சொந்த சொகுசு காரில் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட சிவப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்குகளை அனுமதியின்றிப் பயன்படுத்தியது விமர்சனத்திற்குள்ளானது. புனே உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கெனத் தனி அறை, கார் மற்றும் உதவியாளர்களைக் கேட்டு அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. மேலும் உயர் அதிகாரியின் அறையை அவர் இல்லாத நேரத்தில் ஆக்கிரமித்ததும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதையடுத்து பூஜா கேட்கர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது ஒருபுறம் எனில், யு.பி.எஸ்.சி நடத்திய விசாரணையில், பூஜா கேட்கர் தனது சிவில் சர்வீஸ் தேர்வில் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதற்காகப் பல முறைகேடுகளைச் செய்தது உறுதியானது. குறிப்பாக அவர் தன்னை ஒரு மாற்றுத்திறனாளி என்று கூறி போலியான மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல் அவர் 'கிரீமி லேயர்' வரம்பிற்குள் வந்தாலும் (பூஜா கேட்கரின் பெற்றோர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஆவர் ) , ஓபிசி சலுகை பெறுவதற்காகக் குடும்ப வருமானத்தைக் குறைத்துக் காட்டிப் போலிச் சான்றிதழ் சமர்ப்பித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் யுபிஎஸ்சி விதிகளின்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முயற்சிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால் பூஜா கேட்கர், தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், மின்னஞ்சல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைச் சிறு மாற்றங்கள் செய்து, அடையாளத்தை மறைத்து நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் முறை தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2024 செப்டம்பரில் மத்திய அரசு அவரை ஐ.ஏ.எஸ் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கி உத்தரவிட்டது.
மேலும் அவர் இனிவரும் காலங்களில் யுபிஎஸ்சி தேர்வுகளை எழுத நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டது. தற்போது புனே பனேர் ரோட்டில் முன்னாள் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேட்கர் வசித்து வருகிறார். பூஜா கேட்கருடன் அவரது தந்தை திலீப் கேட்கர், தாய் மனோரமா கேட்கர் வசித்து வந்துள்ளார்கள். பூஜா கேட்கர் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்தநிலையில் அவர் பூஜா கேட்கர் மற்றும் குடும்பத்தினருக்கு மயக்க மருந்து கொடுத்து வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பூஜா கேட்கர் போலீசில் அளித்த புகாரில் கூறுகையில், "சமீபத்தில் எங்கள் வீட்டில் நேபாளத்தை சேர்ந்தவர் வேலைக்கு சேர்ந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு எங்களுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டு நாங்கள் மயங்கிவிட்டோம். பின்னர் அவர் எங்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுவிட்டார்" இவ்வாறு அதில் கூறியிருந்தார். முன்னாள் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
.












Click it and Unblock the Notifications