சுதந்திர தினம் அதுவுமா.. கதறிய முஸ்லிம் இளைஞர்! ஜெய்ஸ்ரீராம் சொல்லி மும்பையில் கும்பல் தாக்குதல்
மும்பை: இந்து பெண்ணுடன் நடந்து சென்றதாக கூறி இஸ்லாமிய இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ சுதந்திர தினத்தன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட சமயத்தில் அனைவரையும் அதிர வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அனைத்து இந்தியர்களும் என் சகோதர, சகோதரிகள் என்று நேற்று நாடே உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிலையில், ஜெய்ஸ்ரீராம் என முழங்கிக்கொண்டு ஒரு கும்பல் முஸ்லிம் இளைஞரை கொடூரமாக தாக்கிய வீடியோவை ஃப்ரீ பிரஸ் ஜோர்னல் ஊடகம் வெளியிட்டு உள்ளது.

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் வந்துகொண்டு இருந்தார். அப்போது அவரை சுமார் 30 பேர் கொண்ட ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. இஸ்லாமியரான அந்த இளைஞர் இந்து பெண் ஒருவருடன் வந்ததாக கூறி அவர் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இளைஞரின் தலை முடியை பிடித்து சிலர் இழுத்து செல்ல மற்றவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு அவரை கொடூரமாக தாக்குகிறார்கள். வலியில் அந்த இளைஞர் கதறி துடிக்கிறார். அவருடன் வந்த பெண், அந்த இளைஞரை விட்டு விடுமாறு மன்றாடுவது கேட்கிறது. அந்த இளைஞரை தாக்கி வீடியோ எடுத்தது மட்டுமின்றி ஜெய்ஸ்ரீராம் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
அந்த இளைஞரை ரயில் நிலையத்துக்கு வெளியே இழுத்து சென்றும் அந்த கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தியது. ரயில் நிலையத்தில் இருந்த மற்ற பயணிகள் இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் தடுக்க முன்வரவில்லை. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலர் ரயில்வே பாதுகாப்பு போலீசார் எங்கே சென்றார்கள் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
இது குறித்து அந்த வீடியோவில் பேசி இருக்கும் தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்தவர், "அந்த இந்து பெண்ணுக்கு வெறும் 16 வயதே ஆகிறது. பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஒரு மைனர் பெண்ணை காப்பாற்றி இருக்கிறோம்." என்று அவர் பேசுகிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை விளக்கம் கொடுத்து உள்ளது. அதே நேரம் மும்பை போலீஸ் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசதுத்தீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சித் தலைவர் வாரிஸ் பதான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "இந்த சம்பவம் ஜூலை 21 அல்லது 22 ஆகிய நாட்களில் நடந்திருக்கும். நிர்மல் நகர் காவல் நிலைய கட்டுப்பட்டுக்குள் இந்த பாந்த்ரா நகர் ரயில் நிலையம் வருகிறது. சம்பவம் நடத்து இத்தனை நாட்கள் கடந்தும் காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எந்த வழக்கும் பதியாமல், விசாரணை செய்யாமல் போலீசார் உள்ளனர்.
மும்பை - ஜெய்பூர் ரயிலில் ஜூலை 31 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கு உடனே பதிவு செய்யப்பட்டது. அதேபோல் இந்த விவகாரத்திலும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அவர் வலியுறுத்தி உள்ளார்.
A #Muslim youth was thrashed at #Bandra terminus railway station in #Mumbai by a #Hindutva mob for going out with #Hindu girl. pic.twitter.com/Im3VzwIOSI
— Hate Detector 🔍 (@HateDetectors) August 15, 2023












Click it and Unblock the Notifications