"முதுகில் குத்தியவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்!" மகாராஷ்டிர அரசியல் குழப்பம்! தாக்கரே பரபர
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பாக தாக்கரே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார்.
தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் திடீரென தலைமறைவு ஆனார். ஒரு வாரத்திற்கும் மேலாக அவர் கோவா, அசாம் என்று பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றார்.
மகாராஷ்டிரா
இதனால் சுமார் 2.5 ஆண்டுகளாக இருந்த மகா விகாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்து. சிவசேனா முழுவதும் தனது கட்டுப்பாட்டில் இருந்ததாக நினைத்த உத்தவ் தாக்கரேவுக்கு இது பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக உடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தனர்.
முதல்வரான ஷிண்டே
இதையடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராகப் பதவியேற்றார். தேவேந்திர பட்னாவிஸை துணை முதல்வராகப் பதவியேற்றார். இதனிடையே தாக்கரே மற்றும் ஷிண்டே என இரு தரப்பும் தாங்கள் தான் அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாகக் கருத வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தல் ஆணையம்
இது தொடர்பாக இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தையும் நாடி இருந்தன. இந்தச் சூழலில் சிவசேனாவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தங்களிடம் இருப்பதை நிரூபிக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு இரு தரப்பையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 1 மணிக்குள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு இரு தரப்பிற்கும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டு உள்ளது.
சிக்கலில் தாக்கரே
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அவர்களில் 40 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் மற்றும் பல எம்எல்சிக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக ஷிண்டே தரப்பில் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதை ஷிண்டே நிரூபித்தால், கட்சியும் சின்னமும் ஷிண்டே தரப்புக்குச் செல்லும்.
ஆதித்யா தாக்கரே
இதனால் தாக்கரே தரப்பு மிகவும் இக்கட்டான ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதனிடையே உத்தவ் தாக்கரேவின் மகனும் சிவசேனா இளம் தலைவர்களில் ஒருவருமான ஆதித்ய தாக்கரே கிளர்ச்சியாளர்களுக்கு முக்கிய மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். ஷிண்டே தரப்புடன் மீண்டும் வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஆதித்யா தாக்கரே அளித்துள்ள பதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது,
முதுகில் குத்தியவர்கள்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "அவர்களுடன் சேர்ந்து எங்கள் முதுகில் குத்தியவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் திரும்பி வர விரும்பினால், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.. கதவு எப்போதும் திறந்தே இருக்கும். மகாராஷ்டிராவில் இப்போது அமைந்துள்ள அரசு 'சட்டவிரோதமானது. அரசியலமைப்பிற்கு விரோதமான அரசே இப்போது அமைந்துள்ளது" என்றார்.
ஏன் முக்கியம்
தாக்கரே தரப்பும் ஷிண்டே தரப்பும் மீண்டும் இணையலாம் என்று கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், "எங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் உடன் நாங்கள் தொடர்பில் இல்லை. நாங்கள் மக்களுடன் மட்டுமே இருக்கிறோம்" என்று கூறி இருந்தார். இந்தச் சூழலில் அவரது கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.