பட்னவீஸுக்கு ஆதரவு திரட்ட முடியாத அஜீத் பவார்.. துணை முதல்வர் பதவியை உதறினார்!
மும்பை தாக்குதல் நினைவு நாள் நிகழ்ச்சியில் அஜித்பவார் பங்கேற்கவில்லை
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். நாடே பரபரப்புடன் எதிர்பார்க்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடத்த உள்ள நிலையில், அஜித்பவார் பதவி விலகியுள்ளது, மீண்டும் மஹாராஷ்டிரிய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேசமயம், நேற்று மாலைக்கு மேல் முதல்வர் பட்னவீஸை சந்தித்திருந்தார் அஜீத் பவார். அவருடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்கு முன்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜீத் பவாரை சந்தித்து மீண்டும் கட்சிக்குத் திரும்புமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் பவார் மனம் மாறி வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் இன்று நடந்த 11வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக தெற்கு மும்பையில் உள்ள போலீஸ் ஜிம்கானாவில் உள்ள மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவிடத்தில் முதல்வர் பட்னவீஸ், அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்தான் அஜீத் பவார் கலந்து கொள்ளவில்லை.

அஜித்பவார்
அஜீத் பவார் இன்னும் துணை முதல்வராகவும் பதவியேற்காமல் இருந்தார். மேலும் தனது வீட்டை விட்டும் அவர் வெளியே வராமல் அமைதி காத்து வந்தார். ஆனால், அதேசமயம், பட்னவீஸ் முதல்வராக தனது பொறுப்புகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
நிகழ்ச்சிக்கு வராத அஜீத் பவார் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் முதல்வர் பட்னவீஸை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இருவரும் தனியாக சந்தித்துப் பேசினர். உச்சநீதிமன்றம் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளதாலும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் வசம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருப்பதாலும் அது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியிருப்பார்கள் என்று யூகிக்கப்பட்டது.

அஜித் பவார்
இந்நிலையில், துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் வழங்கி உள்ளார். ஏற்கனவே தனிமரமாகிவிட்ட அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

திடீர் தகவல்
அதனால், எப்படியும் தன் நிலையை உணர்ந்து துணை முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறிவந்த நிலையில், இன்று பிற்பகல் ராஜினாமா செய்துள்ளார். இதற்காகத்தான், இன்று காலை நடந்த மும்பை தாக்குதல்நினைவு தினத்தைகூட அஜித் புறக்கணித்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மறுப்பு இல்லை
எனினும் அஜித்பவாரின் ராஜினாமா விவகாரத்தை அவரது மகன் மறுத்துள்ளதாக முதலில் செய்தி வெளியானது. இருப்பினும் பவார் விலகி விட்டதாகவே கூறப்படுகிறது. இந்த ராஜினாமாவால் மகாராஷ்டிராவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

வெறியாட்டம்
இன்று நடந்த தீவிரவாத சம்பவ நினைவு நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியும் கலந்து கொண்டார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் மார்க்கமாக 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவி வெறியாட்டம் போட்டனர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் 18 பேர் பாதுகாப்பு படையினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பல கோடி சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.

வீர மரணம்
இந்த தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே, இன்ஸ்பெக்டர் விஜய் சலஸ்கர், உதவி எஸ்ஐ துக்காராம் ஓம்ப்ளே ஆகியோரும் வீர மரணமடைந்தனர். நவம்பர் 29ம் தேதி வரை தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது.

மரண தண்டனை
இந்த தாக்குதலின் இறுதியில் 9 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர் அஜ்மல் கசாப்பை மட்டும் உயிருடன் பிடித்தனர். பின்னர் அவன் மீது வழக்கு தொடரப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு 2012ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அவன் தூக்கிலிடப்பட்டான்.












Click it and Unblock the Notifications