மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் திடீரென பல்டி அடித்த மராத்தா போராட்ட குழு- வேட்பாளர்கள் கூண்டோடு வாபஸ்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மராத்தா இடஒதுக்கீடு கோரி போராடும் போராட்டக் குழு போட்டியிடாது என அதன் தலைவர் மனோஜ் ஜரங்கே திடீரென அறிவித்தார். அத்துடன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றதாகவும் மனோஜ் ஜரங்கே அறிவித்திருக்கிறார். இந்த தேர்தலில் மராத்தா ஜாதி மக்கள் தங்களது சுய விருப்பத்தின் பேரில் யாருக்கும் வாக்களிக்கலாம் எனவும் மனோஜ் ஜரங்கே அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு விவகாரம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மராத்தா ஜாதியினருக்கு தனி இடஒதுக்கீடு, உள் இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யபட்டுவிட்டன. இதனையடுத்து மராத்தா ஜாதியினர் தொடர்ந்து இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மராத்தா ஜாதியினரின் பிரதிநிதியாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார். மேலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மராத்தா இடஒதுக்கீடு கோரும் போராட்டக் குழு வேட்பாளர்களை களமிறக்கும் என அறிவித்திருந்தார். இதனடிப்படையில் பல தொகுதிகளில் இந்த குழுவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளான நேற்று திடீரென தங்களது போராட்டக் குழு தேர்தலில் போட்டியிடாது என மனோஜ் ஜரங்கே அறிவித்தார். அத்துடன் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றதாகவும் மனோஜ் ஜரங்கே அறிவித்திருக்கிறார்.
இந்த தேர்தலில் மராத்தா போராட்டக் குழு, எந்த ஒரு கூட்டணியையும் ஆதரிக்கவில்லை; மராத்தா ஜாதி மக்கள் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் எனவும் மனோஜ் ஜரங்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். மராத்தா ஜாதி இடஒதுக்கீடு போராட்டத்தை காங்கிரஸை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி முழுவீச்சில் ஆதரித்து வரும் நிலையில் மனோஜ் ஜரங்கேவின் இந்த அறிவிப்பு அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications