திகார் சிறையிலிருந்து.. திட்டமிடப்பட்ட அம்பானி வெடிகுண்டு மிரட்டல்..திடுக்கிட வைக்கும் புது தகவல்கள்
மும்பை: முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிகுண்டு வைத்தது தாங்கள் தான் என ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பதிவிட்ட மெசேஜ் திகார் சிறையிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இறுதியில் உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிகுண்டுகள் நிரம்பிய கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் முழுவதும் 2.5 கிலோ எடையுள்ள 20 ஜெலட்டின் குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கை தற்போது தேசியப் பாதுகாப்பு முகமை விசாரணை செய்து வருகிறது. த்ரில்லர் திரைப்படங்களைவிட இந்த வழக்கு பல அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது.

திகார் சிறை
இந்நிலையில், இதில் மற்றொரு திருப்பமாக விசாரணையில் திகார் சிறைச்சாலை பெயரும் அடிபடுகிறது. அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு வைத்ததற்கு ஜெய்ஷ் உல் ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது வெறும் டிரைலர்தான் என்றும் மெயின் பிக்சர் இனி தான் நடக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டு, டெலிகிராம் தளத்தில் உள்ள ஒரு க்ரூப்பில் மெசேஜ் செய்திருந்தனர்.

மற்றொரு மெசேஜ்
இந்த மெசேஜ்யை பதிவிட்டது யார் என்று தகவல்களை திரட்டி தருமாறு தனியார் அமைப்பு ஒன்றிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த டெலிகிராம் சேனல் உருவாக்கப்பட்ட சிம் கார்ட் திகார் சிறைக்கு மிக அருகிலோ அல்லது சிகார் சிறையின் உள்ளிருந்தோ இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி சிறப்பு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

என்ன நடந்தது
இந்த டெலிகிராம் க்ரூப் பிப்ரவரி 26ஆம் தேதி உருவாக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வைத்தது தாங்கள் தான் எனப் பிப்ரவரி 27ஆம் தேதி இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மறுநாளே மற்றொரு அமைப்பு தாங்கள் தான் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பினர் என்றும் தங்களுக்கும் இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த இரண்டாவது மெசேஜ் வெளிநாட்டிலிருந்து பதிவிடப்பட்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

கார் உரிமையாளர்
அம்பானி வீட்டருகே கண்டுபிடிக்கப்பட்ட காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரென் என்பவரின் உடல், உயிரிழந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை அருகே கண்டுபிடிக்கப்பட்டது, இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் காரின் உண்மையான உரிமையாளர் இல்லை என்பதும் கடந்த சில மாதங்களாக அவர் காரை பராமரித்து மட்டுமே வந்தது விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications