தீயாக பரவும் கொரோனா..முழு ஊரடங்கு? மீண்டும் நெடுஞ்சாலைகளை முற்றுகையிடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆட்டோ மற்றும் லாரிகள் மூலம் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது
இதன் காரணமாக அங்கு இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் மாநிலத்தில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டமும் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று நடைபெற்றது.

மீண்டும் லாக்டவுன்
அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் வெற்றி பெற நாம் சில கஷ்டங்களைத் தாங்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவில் மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்பதையே அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகச் செய்திகள் பரவின.

வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இதனால் அச்சமடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இரண்டு சக்கர வாகனங்களில், லாரிகள் மற்றும் ஆட்டோகள் மூலம் அவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்காக முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மத்தியப் பிரதேசம் வழியாகச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர்.

எளிதில் செல்ல முடிகிறது
தற்போது மகாராஷ்டிராவில் வார இறுதி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எளிதாக பல நூறு கிலோமீட்டர் செல்ல முடிகிறதாக புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், யாரும் மாநிலத்தைவிட்டு வெளியேறத் தேவையில்லை என மகாராஷ்டிர அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நடந்து சென்ற தொழிலாளர்கள்
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி தொடங்கி முதல் 21 நாட்களுக்கு முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் இழந்த பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலை மார்க்கமாகப் பல நூறு கிலோமீட்டர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அப்படி செல்லும் வழியிலேயே பலர் உயிரிழக்கும் சம்பங்களும் நடந்தது.

மும்பையில் கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,330 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மும்பையில் மட்டும் 5,10,512 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் கொரோனாவால் 28 பேர் பலியாகினர். இதன் மூலம் கொரோனா உயிரிழப்பு 11,994ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications