ஓய் பிரிவு பாதுகாப்பில் இருந்த பாபா சித்திக் சுட்டுக்கொலை.. 15 நாட்களுக்கு முன்பே மிரட்டல்.. பரபர
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கிற்கு 15 நாட்களுக்கு முன்பே அச்சுறுத்தல் வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு அவருக்கு ஒய் பிரிவாக அதிகரிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருந்த தலைவரான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாரஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளார். இவரது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பாபா சித்திக். முன்னாள் அமைச்சரான இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்தார். இவர் நேற்று மாலை, மும்பை பந்திராவில் உள்ள நிர்மல் நகர் என்ற இடத்தில் தசரா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்தார்.

தனது அலுவலகம் அமைந்துள்ள இந்த இடத்திற்கு அருகே பாபா சித்திக் நின்ற போது, அவரை பின் தொடர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது 3 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த பாபா சித்திக், படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மும்பை போலீசார் அவரை மீட்டு அருகே இருந்த லீலாவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மூன்று பேரில் இருவரை போலீசார் பிடித்தனர். கைதான நபரில் ஒருவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவரர் என்பதும் மற்றொருவர் ஹரியானாவை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சித்திக் பாபாவிற்கு 15 நாட்கள் முன்பே மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு ஒய் பிரிவாக அதிகரிக்கபப்ட்டது. இருந்த போதிலும் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதில் லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாமோ என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகிறார்கள். லாரன்ஸ் பிஸ்னோய் பாகிஸ்தான் அருகிலுள்ள பஞ்சாப் பெரோஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2008-ம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலின்போது தனது நண்பர் கோல்டி பிரரின் எதிரணி வேட்பாளரை லாரன்ஸ் துப்பாக்கியால் சுட்டார்.
இதற்காகக் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார். அதன் பிறகும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த லாரன்ஸ் பிஸ்னோயை மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலையில் முக்கிய குற்றவாளியாகக் லாரன்ஸ் பிஸ்னோய் கருதப்படுகிறார்.












Click it and Unblock the Notifications