பட்னாவிஸ் பெரும்பான்மையைப் பெற.. 'சாம தான பேத தண்டம்'.. நாராயண் ரானேவை களமிறக்கியது பாஜக
மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள .பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை பெற முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவை பாஜக களம் இறக்கி உள்ளதாம்.
நாராயண் ரானேவுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியில் நீண்டகாலம் பணியாற்றியவர் என்பதாலும் அங்குள்ள எம்எல்ஏக்களுடன் நல்ல நட்பு உறவு இருப்பதாலும் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்களை திரட்ட அவரை பாஜக களம் இறக்கி உள்ளதாம்.
தற்போது மாநிலங்களவையில் பாஜக உறுப்பினராக இருக்கும் ரானே, தனது இரு முன்னாள் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நல்லுறவு கொண்டுள்ளார். அவர் 2017 ல் காங்கிரசிலிருந்து வெளியேறியபோது, "எனது நண்பர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். சேனாவில் உத்தவ் (தாக்கரே) மற்றும் காங்கிரசில் அசோக் சவான் தவிர அனைவரும் எனது நண்பர்கள்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சிவசேனா எதிர்ப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவரான சரத் பவாரின் மருமகன் அஜித் பவாரை வைத்து சனிக்கிழமையன்று திடீரென பாஜக மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை உருவாக்கியது. இந்நிலையில் பாஜக அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத்தருவது என்பது, ரானேவுக்கு முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கூட்டணி கட்சியான சிவசேனாவின் கடும்எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவைக்கு எம்பி 2018 ஆம் ஆண்டில் பாஜக நாராயண் ரானேவை தேர்வு செய்து அனுப்பி வைத்து இருந்தது.

பாஜகவில் இணைத்தார்
இத்துடன் அக்டோபர் 21 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ரானேவின் மகாராஷ்டிரா சுவாபிமன் பக்ஷை கட்சியை பாஜகவுடன் இணைக்க முதல்வர் ஃபட்னாவிஸ் தான் ஏற்பாடு செய்திருந்தார்.

நாராயண் ரனே முடிவு
நவம்பர் 12 ம் தேதி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்த பின்னர், "சாம தான பேத தண்டம் (ஆலோசனை, கவர்ச்சி, அச்சுறுத்தல்கள், கீழ்ப்படிதல்)" என தேவையான அனைத்தையும் செய்து, பாஜக அரசாங்கத்திற்காக தன்னால் முடிந்தவரை பாடுபடுவேன் என்று ரானே கூறியிருந்தார்.

சிவசேனா கட்சிக்காரர்
மேலும் 105 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்க 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பெரும்பான்மையைப் பெற, 40-45 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

பால்தாக்கரே தான் வழிகாட்டி
இந்த நாராயன் ரானே யார் என்றால், இளம் வயதில் இருந்தே சிவசேனாவில் ஈடுபாட்டுடன் இருந்தவர் மனோகர் ஜோஷிக்கு பதிலாக 1999 ல் மகாராஷ்டிரா முதல்வராக அதன் நிறுவனர் பால் தாக்கரே அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நல்ல உறவு இல்லை
இப்படிப்பட்ட சூழலில், பால் தாக்கரேவின் வாரிசான உத்தவ் தாக்கரேவுடன் ரானேவுக்கு உறவு அவ்வளவு இணக்கமாக இல்லை. படிப்படியாக உத்தவ் தாக்கரேவின் வளர்ச்சியால் ஜூலை 2005 ம் ஆண்டு சிவசேனா கட்சியில் இருந்து ரானே வெளியேறினார்.

அமைச்சர் ஆனார்
ரானே பின்னர் காங்கிரசில் சேர்ந்து பிருத்விராஜ் சவான் அரசாங்கத்தில் வருவாய் அமைச்சரானார். இருப்பினும், தலைமைக்கு எதிராக பேசியதற்காக 2008 ல் அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் அவர் மன்னிப்பு கேட்ட பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

பாஜகவுடன் நெருக்கம்
இந்நிலையில், டிசம்பர் 2017 இல், காங்கிரசில் இருப்பதால் தனத லட்சியங்கள் முடங்கிப்போனதாக உணர்ந்த ரானே, அதற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சொந்தக் கட்சியை (மகாராஷ்டிரா சுவாபிமன் பக்ஷை)உருவாக்கினார். பின்னர் படிப்படியாக பாஜக நெருங்கினார்.

கட்சியை இணைத்தார்
இருப்பினும், சிவசேனா அவரை எதிரியாக நினைத்த காரணத்தால் பாஜக அவரை சேர்த்துக்கொள்ளாமலேயே இருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தான் ஃபட்னாவிஸ் தலைமையில் தனது கட்சியை ரானே பாஜகவில் இணைத்தார்.

உதவிய ஃபட்னாவிஸ்
எனவே தேவேந்திர ஃபட்னாவிஸ் அதிகாரத்தில் இருக்க உதவுவதன் மூலம் அவருக்கு மற்றொரு கைமாறாக மெஜாரிட்டியை பெற்றுத்தரும் முனைப்புடன் நாராயண் ரானே உள்ளார்.












Click it and Unblock the Notifications