"150- 155 சீட் உறுதி.." மகாராஷ்டிராவில் திட்டமிட்டு காய்களை நகர்த்தும் பாஜக! எதிர்க்கட்சிகள் திணறுதே
மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஆளும் மகாயுதி கூட்டணி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கவே அங்குக் காய்களை நகர்த்தி வருகிறது.
மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே முதல்வரா இருக்கிறார். அங்கு பாஜக கூட்டணி அரசே ஆட்சியில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் முதல் இரண்டு வாரங்களில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனச் சொல்லப்படுகிறது.
முக்கிய தகவல்: இதற்கிடையே மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் என்சிபி கட்சிகளைக் கொண்ட ஆளும் மகாயுதி கூட்டணி தங்கள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எத்தனை சீட்: இதில் விவரம் அறிந்தோர் கூறுகையில், "கூட்டணியில் பாஜக தான் அதிகபட்ச இடங்களில் போட்டியிடப் போகிறது. பாஜகவுக்குப் பிறகு ஷிண்டே சிவசேனாவுக்கு அதிக சீட் கிடைக்கும். அதன் பிறகு அஜித் பவார் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக 150 முதல் 155 இடங்களிலும் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. மறுபுறம் ஷிண்டே சிவசேனா 90-95 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 40-45 இடங்களிலும் போட்டியிட வாய்ப்புள்ளது" என்கிறார்கள்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பல கட்ட கூட்டங்களைத் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பாஜக நடத்தி இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் முனைப்பில் பாஜக இருக்கிறதாம். பெரும்பாலான சீட்களில் யார் போட்டியிடுவது என்பதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாம். இன்னும் சுமார் 25 இடங்களில் மட்டுமே இழுபறி நிகழ்வதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
எப்படி: கூட்டணிக் கட்சிகளும் கூட தொகுதிப் பங்கீட்டிற்கு முன்பு பல சர்வேக்களை நடத்தியதாம். யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை வைத்தே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.. மேலும், பல இடங்களில் மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மீது எதிர்ப்பில் இல்லையாம். இதனால் பெரும்பாலான இடங்களில் தற்போதுள்ள எம்எல்ஏக்களுக்கே வாய்ப்பு தரப்படுமாம். வெறும் 5-10% இடங்களில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
திட்டம் என்ன: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மொத்தம் 288 இடங்கள் உள்ளன. 145 இடங்களில் வெல்லும் கட்சி அங்குத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க முடியும். கடந்த முறை தேர்தலில் பாஜக 122 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால், இந்த முறை கூடுதலாக 155 இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. அதாவது பாஜக அங்கு மிகப் பெரிய வெற்றி பெற்றால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். அதை நோக்கியே பாஜக தனது தேர்தல் வியூகத்தை அமைத்து வருகிறதாம். நிச்சயம் வெல்ல வாய்ப்பு இருக்கும் தொகுதிகளைக் குறிவைத்தே பாஜக இறங்குகிறதாம்.
மறுபுறம், அங்கு எதிர்க்கட்சிகளும் வலிமையாகவே உள்ளன. காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி இணைந்து களத்தில் இறங்குகின்றன. எதிர்க்கட்சிகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிவிட்ட போதிலும் அது இழுபறியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications