"இது மத்திய பிரதேசம் இல்லை, மகாராஷ்டிரா.. உங்கள் பிளான் வேலைக்காகாது!" ஓப்பனாக எச்சரிக்கும் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் மாயமாகி உள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இருப்பினும் பாஜக மற்றும் சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி முறிந்தது.

கூட்டணி ஆட்சி
இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்தது. இதுவரை 3 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், கூட்டணி ஆட்சி சுமுகமாகவே சென்று கொண்டு இருந்தது. இருப்பினும், கடந்த சில வாரங்களாகவே அங்கு சில சிவசேனா உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் பாஜக கூடுதலாக ஒரு இடத்தில் வென்றது.

மாயம்
இப்படியொரு சூழலில் நேற்று நடைபெற்ற சட்டமேலவை (எம்.எல்.சி) தேர்தலிலும் பாஜகவுக்குக் கூடுதலாக ஒரு இடம் கிடைத்தது இது சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாயமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை சிவசேனா தரப்பால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

எங்கே உள்ளனர்
அவருடன் சேர்ந்து சுமார் 13 சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் திடீரென தலைமறைவாகி உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ள சிவசேனா எடுத்து வரும் முயற்சிகளும் பலன் இல்லை என்றே கூறப்படுகிறது. தலைமறைவான 13 சிவசேனா எம்.எல்.ஏக்களும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சி கவிழ்ப்பு
ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியிலிருந்த மத்தியப் பிரதேசம் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் அதிருப்தி காரணமாக பாஜகவில் ஐக்கியமாகி காங்கிரஸ் அரசு கவிழக் காரணமாக இருந்தனர். இப்போது அதேநிலை மீண்டும் மகாராஷ்டிராவில் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா சூழல்
எம்எல்ஏக்கள் மாயமாவதைத் தடுக்கும் வகையில் சிவசேனா தனது கட்சியின் மற்ற எம்எல்ஏக்களை சூரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளது. மேலும், இது தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சர் ஷிண்டே இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்க உள்ளார். 288 எம்எல்ஏக்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனா (56), தேசியவாத காங்கிரஸ் (54), காங்கிரஸ் (44) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இது மகாராஷ்டிரா
இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "ஷிண்டே மற்றும் சில எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இது ராஜஸ்தானோ அல்லது மத்தியப் பிரதேசமோ இல்லை. இது மகாராஷ்டிரா! நாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்.

திரும்புவார்
(தலைமறைவான அமைச்சர்) ஏக்நாத் ஷிண்டேவை எனக்கு நன்றாகத் தெரியும்.. அவர் ஒரு உண்மையான சிவசேனா நபர். அவர் எந்த நிபந்தனையும் இல்லாமல் நிச்சயம் திரும்புவார். கூட்டணி அரசு அமைந்த போதும், இதேபோன்ற முயற்சியை பாஜக மேற்கொண்டது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இப்போது மீண்டும் அதே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இப்போது சூரத்தில் இருக்கும் எங்கள் எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.

ஆலோசனை
நாங்கள் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோருடன் நிலைமை குறித்து ஆலோசித்து வருகிறோம். தாங்கள் கிங் மேக்கர்கள் என்ற எண்ணத்துடன் வேலை செய்பவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். குஜராத்தில் இருக்கும் எங்கள் எம்எல்ஏக்களை வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் அவர்கள் அனைவரும் சிவசேனாவுக்கு உண்மையாக இருப்பார்கள். அவர்கள் நிச்சயமாகத் திரும்பி வருவார்கள். நிலைமை விரைவில் சீராகும்" என்றார்.












Click it and Unblock the Notifications