மகாராஷ்டிரா ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பாஜக? 13 சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் தலைமறைவு?
மும்பை/காந்திநகர்: மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் ஆபரேஷன் தாமரையை பாஜக களமிறக்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலுக்குப் பின்னர் சிவசேனாவின் 13 எம்.எல்.ஏக்கள் திடீரென தலைமறைவானதால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Recommended Video
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. இம்மாநிலத்தில் சட்டமேலவை (எம்.எல்.சி) செயல்பட்டு வருகிறது. சட்டமேலவையில் 10 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. சட்ட மேலவை உறுப்பினர்களை எம்.எல்.ஏக்கள்தான் தேர்ந்தெடுப்பர்.

மகாராஷ்டிரா சட்டசபையில் கட்சிகளின் பலம்: பாஜக- 106; சிவசேனா 55; தேசியவாத காங்கிரஸ்-51; காங்கிரஸ் 44; இதர கட்சிகள், சுயேட்சைகள்- 29. மொத்தம் உள்ள 288 எம்.எல்.ஏக்களில் 285 பேர் இத்தேர்தலில் வாக்களித்தனர். சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லடாகே கடந்த மாதம் காலமானார். தேசியவாத காங்கிரஸின் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் இருவரும் சிறையில் உள்ளதால் வாக்களிக்கவில்லை.
மொத்தம் 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 2 வேட்பாளர்களையும் பாஜக 5 வேட்பாளர்களையும் நிறுத்தியது. 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. நேற்று மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒரு எம்.எல்.சி. வெற்றி பெற மொத்தம் 26 எம்.எல்.ஏக்கள் தேவை.
இதனடிப்படையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 2 இடங்களிலும் பாஜக 4 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். ஆனால் நேற்று நடைபெற்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் வென்றது. அதாவது காங்கிரஸ், சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் கொறடா உத்தரவை மீறி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. அண்மையில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலிலும் பாஜக இதேபோல ஒரு வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து பாஜகவுக்கு மறைமுகமாக ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 13 சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் திடீரென தலைமறைவானது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தலைமறைவான 13 சிவசேனா எம்.எல்.ஏக்களும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாநிலங்களில் ஆட்சிகளைக் கவிழ்க்கக் கூடிய ஆபரேஷன் தாமரையை மகாராஷ்டிராவிலும் பாஜக தொடங்கிவிட்டது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications