ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு? விமானி அனுப்பிய எமெர்ஜென்சி மெசேஜால் பதற்றம்!
மும்பை: மும்பையிலிருந்து லன்டன் பறந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானிகள் எமெர்ஜென்சி மெசேஜை அனுப்பியுள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
சமீப காலமாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. நேற்று 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மும்பையிலிருந்து புறப்படும் வெவ்வேறு ஏர்லைன் நிறுவனங்களை சேர்ந்த 3 விமானங்களுக்கு டிவிட்டர் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் மூன்று விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மும்பை போலீசார் சத்தீஸ்கரைச் சேர்ந்த சிறுவனை கைது செய்தனர். நண்பன் பெயர் போலியான டிவிட்டர் கணக்கு உருவாக்கப்பட்டு, அவனை சிக்க வைக்கவே இவ்வாறு செய்ததாக சிறுவன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.
இந்நிலையில், இன்று மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் 129, நடுவானில் எமெர்ஜென்சி சிக்னலை அனுப்பியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணியளவில் இந்த மெசேஜ் வந்திருக்கிறது. இதனையடுத்து இந்த விமானம் உடனடியாக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக விமானி 7700 எனும் ஸ்குவாக் குறியீட்டை பகிர்ந்திருந்தார். இதன் அர்த்தம் விமானம் அவசர நிலையில் இருக்கிறது, உடனடியாக தரையிறக்க வேண்டும் என்பதாகும். இதனையடுத்து தைஃபூன் ரக போர் விமானத்தின் பாதுகாப்புடன் ஏர் இந்தியா விமானம் 129 ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்தில் விமானி வெளியிட்ட ஆடியோவில், தங்கள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த ஆடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
தொடர்ந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் ஏர் லைன் நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளன. எது நிஜமான மிரட்டல்? எது போலி என கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றன.












Click it and Unblock the Notifications