விமானத்தில் நடு வானில் அலறிய பயணிகள்.. கரப்பான் பூச்சியால் ஏர் இந்தியாவுக்கு வந்த தலைவலி!
மும்பை: அமெரிக்காவின் சாஸ்பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான்பூச்சிகள் வந்ததால் பயணிகள் அலறினர். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது கரப்பான்பூச்சியை பார்த்து விமான பயணிகள் அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு விமான பயணிகளிடம் ஏர் இந்தியா விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
சமீப காலமாக ஏர் இந்தியா விமானங்கள் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறுகளில் சிக்குவதும், அவசரமாக தரையிறக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. இது விமான பயணிகளுக்கு சற்று கலக்கத்தை கொடுப்பதாக அமைந்து இருக்க கூடிய நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளை நடு வானில் அலற வைத்த ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

கரப்பான்பூச்சியால் அலறிய பயணிகள்
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு ஏஐ180 விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு பயணிகள் தங்கள் இருக்கைக்கு கீழே கரப்பான்பூச்சி ஓடியதை கவனித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் இருவரும் அலறினர். உடனடியாக விமான சிப்பந்திகளுக்கு இது பற்றி பயணிகள் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த விமான சிப்பந்திகள் இருவரும், பயணிகளை வேறு இருக்கையில் மாற்றி அமர வைத்தனர். இதற்கிடையே, கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் முழுவதுமாக கிளீன் செய்யப்பட்டது. இதையடுத்து, விமானம் வழக்கமான நேரத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் தொடர்பாக விமான பயணிகளிடம் ஏர் இந்தியா விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
விமான நிறுவனம் விளக்கம்
இது குறித்து ஏர் இந்தியா அளித்த விளக்கத்தில், "தொடர்ச்சியாக பூச்சிகள் நுழைவதை தவிர்க்க புகையூட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இருந்த போதிலும் சில நேரங்களில் விமானத்தின் தரை வழி செயல்பாடுகளின் போது பூச்சிகள் நுழைந்து விடுகின்றன. பயணத்தின் போது பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு மீண்டும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
அகமதாபாத் விமான விபத்து
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் மாதம் குஜராத்தில் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணியை தவிர அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து சம்பவத்தை தொடர்ந்து, விமானங்களில் உரிய பரிசோதனைகளை செய்யுமாறு விமான போக்குவரத்து இயக்குநகரம் உத்தரவிட்டது. இதையடுத்து, தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானத்துக்கு சவால்கள்
இத்தகைய சூழலில்தான் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ச்சியாக செயலாட்டு சவால்கள் மற்றும் பராமரிப்பு பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வருகிறது. இது ஏர் இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டோக்கியோவில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் கேபின் வெப்ப நிலை வழக்கத்திற்கு மாறாக இருந்ததால், கொல்கத்தாவிற்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதேபோல, மும்பையில் இருந்து சென்னைக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், கேபினில் எரிந்த வாடை வீசியதால் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.












Click it and Unblock the Notifications