வேலைவாய்ப்பில் மராட்டியர்களுக்கு 80% கோட்டா, 1 ரூபாய் க்ளீனிக், மதசார்பின்மை: சிவசேனா கூட்டணி அதிரடி
மும்பை: சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மகாராஷ்டிராவில் இன்று ஆட்சியமைக்கின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்ரே முதல்வராகிறார். தாக்ரே குடும்பத்திலிருந்து முதல்வராகும் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இதில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மதசார்பற்ற கட்சிகளாகவும், சிவசேனா, இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சியாகவும் அறியப்பட்டு வருகிறது. எனவே கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று தலைவர்களிடையே பேசி முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மகா விகாஷ் அகாதி என்று அழைக்கப்படும் இந்த முக்கட்சி கூட்டணி சார்பிலான குறைந்தபட்ச செயல்திட்டம் வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள்:

மதச்சார்பின்மை
அரசியல் சாசனம் வரையறுத்துள்ள மதசார்பின்மைத் தன்மையை உறுதி செய்ய இக்கூட்டணி பாடுபடும். மதச்சார்பின்மை தொடர்பாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் பிரச்சினைகள் ஏற்பட்டால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கலந்து ஆலோசித்து, ஒரே மாதிரியான பார்வையை முன்வைக்கும்.

விவசாயிகள்
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குதல் மற்றும் அவர்களுக்கு உடனடியாக கடன் தள்ளுபடி வழங்குதல், பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்குவதற்காக பயிர் காப்பீட்டு திட்டம் திருத்தப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிலையான நீர் வழங்கல் முறையை ஏற்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வேலைவாய்ப்பு
வேலையின்மை பிரச்சினையை சமாளிக்க, மாநில அரசில், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கான செயல்முறை உடனடியாக தொடங்கப்படும். படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு ஃபெல்லோஷிப் ஏற்படுத்தப்படும். மகாராஷ்டிரா மாநில இளைஞர்களுக்கு, பணிகளில் 80 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும்.

ஒருங்கிணைப்பு குழு
மகாராஷ்டிரா அரசில் இரண்டு ஒருங்கிணைப்புக் குழுக்கள் இருக்கும், ஒன்று மாநில அமைச்சரவையில் ஒருங்கிணைப்புக்காகவும், மற்றொன்று கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக்காகவும் செயல்படும்.
|
ஒரு ரூபாய் க்ளீனிக்
நல்ல மற்றும் குறைந்த விலை சுகாதார வசதிக்காக தாலுகா மட்டத்தில் ஒரு ரூபாய் கிளினிக் தொடங்கப்படும். சமூக நீதியை உறுதி செய்வதற்கும், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதற்கும் கவனம் செலுத்துவோம். சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தன்மையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அரசு கவனம் செலுத்தும்.












Click it and Unblock the Notifications