அடேங்கப்பா... மகாராஷ்டிர சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவிற்கு பலத்த அடி கொடுத்த காங்கிரஸ்.. அமோக வெற்றி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயஸ்ரீ பாட்டில் வெற்றிபெற்றார்.
மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி, சத்தீஸ்கரின் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதி, பீகாரின் போசாஹன் சட்டப்பேரவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த சந்திரகாந்த் பாட்டில் ஜாதவ் கடந்த 2021 டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலமானார். இதனை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த எம்.எல்.ஏ. சந்திரகாந்த் பாட்டில் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ பாட்டில் நிறுத்தப்பட்டார். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆளும் சிவசேனா கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
பாஜக சார்பில் சத்யஜித் கடம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 15 பேர் வேட்பாளராக இந்த தொகுதியில் போட்டியிட்டனர். ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்து முடிந்த வாக்குப்பதிவில் 61.19% வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயஸ்ரீ பாட்டில் பாட்டில் பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் பாஜக வேட்பாளரை விட 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இதேபோல் சத்தீஸ்கர் இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வியடைந்த காங்கிரஸுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி உத்வேகமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications