நொறுங்கும் லாக்டவுன்.. "ஊரடங்கு வேணாம், ஊருக்கு போறோம்" அதிர வைத்த தொழிலாளர்கள்.. நடந்தது என்ன
ஆயிரக்கணக்கில் திரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் செய்துள்ளனர்
மும்பை: "ஊரடங்கு வேணாம்... ஊருக்கு போறோம்" ஊரடங்கு வேணாம்.. உழைக்க விடு.. என்ற வெளிமாநில தொழிலாளர்களின் முழக்கம் மும்பை நகர செவிப்பறையை கிழித்து கொண்டு போனது.. லாக்டவுனை நீட்டித்த அன்றே ஊரடங்கினை தொழிலாளர்கள் உடைத்து கொண்டு வெளியே வந்ததும், சமூக விலகல் குறித்த துளிகூட அச்சமின்றி மும்பை பந்தராவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது!!
Recommended Video
ஊரடங்கு நேற்று நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதுமே கடுமையான அதிருப்தியை அடைந்தது மும்பையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான்.. ஊரடங்கு உத்தரவு நேற்றோடு முடிவடையும் நிலையில் அவரவர் சொந்த ஊர்களுக்கு போகலாம் என்று நினைத்து வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மும்பை பாந்த்ரா ரயில்வே ஸ்டேஷனில் திரண்டனர்..
இதற்கு காரணம், ஊரடங்கு நீட்டிக்கப்படும் முன்பாக ரயில் இயக்கப்படும் என்று ஒரு பொய்யான வதந்தி பரவியதுதான்... இதை நம்பிதான் இவர்கள் ஸ்டேஷனுக்கு பெட்டி, படுக்கையுடன் வரத் தொடங்கினர்.. முதலில் ஆயிரம் பேர் கூடிய நிலையில் பிறகு அடுத்தடுத்து 2 ஆயிரம், 3 ஆயிரம் பேர் கூட தொடங்கினர்.. ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதுடன், ரயில்கள் எதுவும் இயங்காது, அது வதந்தி என்பது இறுதியில் தெரிந்தபிறகு ஆவேசமாகிவிட்டனர். ஆனால் "நாங்கள் மத்திய அரசின் அறிவிப்பின் பேரில்தானே ரிசர்வ் செய்திருந்தோம்' என்றார்கள் பலர்.

ஆவேசம்
ஆத்திரமடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்... "ஊரடங்கு வேண்டாம்.. ஊருக்கு போகிறோம்.. எங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைப்பதில்லை.. இனியும் இங்கே இருக்க முடியாது" என்று போராட்டங்களின்போது கண்ணீருடன் புலம்பல்களை முன்வைத்தனர். இவர்களில் பெரும்பாலானோர் உத்திரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.. கடந்த 3 வாரங்களாக வேலை எதுவும் இல்லாத நிலையில், ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பாடு கூட தங்களுக்கு சரியாக கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

கண்ணீர் புகை
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.. இப்படி சமூக விலகலை கடைபிடிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் உயர் போலீஸ் அதிகாரிகளே அதிர்ந்து போயினர்..சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.. தேவையான அடிப்படை பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் உறுதியளித்தனர்.. ஆனால் "ஊரடங்கு வேண்டாம், உழைக்கவிடு" "ரேஷன் வேண்டும் ரேஷன் வேண்டும்" என்பனதான் அந்த சமயத்தில் அவர்களின் நீண்ட நேரம் முழக்கமாக இருந்து ஒலித்து கொண்டே இருந்தததே தவிர அதிகாரிகள் பேசுவது எதுவுமே அவர்கள் காதில் விழவில்லை.

அரசியல்
நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த போராட்டம், அடுத்த சில மணி நேரங்களிலேயே அரசியலாக்கப்பட்டது.. முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் குற்றச்சாட்டை முதலில் முன்வைத்தார்.. "புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நாங்கள் முதல் நாளிலிருந்து இந்த அரசாங்கத்திடம் சொல்லி வருகிறோம்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் அவ்வாறு செய்ய தவறிவிட்டது, அதனால்தான் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வெளியே வந்து சாப்பாட்டை கொடுங்கள் அல்லது ஊருக்கு அனுப்புங்கள் என்று கூறும் ஆபத்தான சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மகாராஷ்டிர அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது. இதுபோன்ற நேரத்தில் அரசியலில் ஈடுபடுவது வெட்கக்கேடானது" என்றார்.

அமித்ஷா
எனினும், "வெளி மாநில தொழிலாளர்கள் யாரையும் விருப்பமின்றி அடைத்து வைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை... யாரும் கவலைப்பட வேண்டாம்" என்று உத்தகவ் தாக்கரே ஆறுதல் வார்த்தைகள் சொல்லி இருந்தாலும் சரி... அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தவ் தாக்கரேவை தொலைப்பேசியில் அழைத்து கவலை தெரிவித்திருந்தாலும் சரி... இந்த போராட்ட பாதிப்பு உடனே அடங்கிவிடாது என்பதே உண்மை.. உறவுகளை பிரிந்து தவிக்கும் வலியும் பசியின் உச்சமும், நாளைய எதிர்கால தவிப்பும்தான் தொழிலாளர்களுக்கு இப்போது மேலோங்கி உள்ளது!!!

தலைநகரம்
நாட்டின் "நிதி தலைநகரம்" என்று அழைக்கப்படும் மும்பையில் சமூக இடைவெளி இல்லாமல் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடியதால் நோய் தொற்றை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.. இப்போதைக்கு நாட்டிலேயே மஹாராஷ்டிராவில்தான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 3000 திற்கும் மேல் உள்ளனர்.. அதிலும் மும்பை தான் முக்கிய நகரமாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வெளி மாநில தொழிலாளர்களின் போராட்டம் மாநில மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதால் ஊரடங்கை அறிவித்த அரசு, இப்போது ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் குழும செய்தது அரசின் பெரும் தோல்வியாகவும் ஒரு சாராரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்த தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன... ஒருவருக்கொருவர் நெருக்கி தள்ளி முண்டியடித்து கொண்டுதான் திரண்டு உள்ளனர்..

தவிப்பு
கொரோனா என்பது நம் மாநிலத்தை முதன்மையாக பீடித்துள்ளதே என்ற கவலை, பயம், பீதி, எதுவுமே அவர்களிடம் தென்பட முடியவில்லை.. அவர்களின் முகங்களில் பசியின் கோரத்தாண்டவத்தை காண முடிகிறது.. இயலாமையின் தவிப்பை உணர முடிகிறது.. திரண்ட தொழிலாளர்கள் கூட்டத்தில் ஒருத்தருக்கு தொற்று இருந்தாலும்கூட, நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகும், சிக்கலாகும் என்று பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

தொழிலாளர்கள்
இதேநிலைதான் சூரத்திலும்.. 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீதிக்கு வந்தனர்.. பெரும்பாலும் சூரத்தில், வைர, ஜவுளி, எம்ப்ராய்டரி ஃபேக்டரிகள்தான் அதிகம்.. தமிழ்நாடு, ஒடிசா, பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் நிறைய பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.. கடந்த 3 வாரமாக வேலை இழந்த தொழிலாளர்கள் அங்கேயே சிக்கி கொண்டுள்ளதால், "எங்களை ஊர்களுக்கு அனுப்புங்கள்" என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து தெருவில் முழக்கமிட்டு குவிந்தனர்.

விமானங்கள்
முன்பு ஒருமுறை சீனாவில் இந்திய மாணவர்கள் 700 பேர் சிக்கிக்கொண்டபோது மத்திய அரசு 3 விமானங்களை அனுப்பி அவர்களை மீட்டு வந்தது... அதேபோல, ஈரானில் 340 இந்திய தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட போதும் 2 விமானங்களை அனுப்பி அவர்களை மீட்டு வந்தது... இப்படிக்கூட ஏதாவது ஒரு யோசனை செய்யலாமே என்கின்றனர் சிலர்!! எப்படியோ, இன்று கொரோனா அச்சத்தை நீக்கி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து மக்களையும் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் மாநில அரசுகள் உள்ளன! ஊரடங்கு உத்தரவினை பிரதமர் அன்று தடாடலடியாக பிறப்பித்தபோதும் டெல்லியில் இருந்து தொழிலாளர்கள் சாரை சாரையாக நடைபயணம் மேற்கொண்டனர்.. இப்போது நீட்டித்தபோதும், ஆயிரக்கணக்கானோர் திரண்டு மும்பை, சூரத்தில் போராடி உள்ளனர்..












Click it and Unblock the Notifications