5 மாதத்திலேயே மோடி திறந்த “அடல் சேது” பாலத்தில் விரிசல்.. விளாசிய காங்கிரஸ்.. பாய்ந்து வந்த பாஜக!
மும்பை: கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த மும்பை அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகே உள்ள நவிமும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ தூரத்துக்கு பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டது. நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்ற இந்த "அடல் சேது" பாலம், மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது.
22 கி.மீ. நீளமுள்ள இந்த 6 வழிப் பாலம், 16.5 கி.மீ தூரத்துக்கு கடலிலும், 5.5 கி.மீ. தூரத்துக்கு நிலத்திலும் அமைந்துள்ளது. இந்த கடல் பாலத்தை மும்பை ஐஐடியை சேர்ந்த 6 வல்லுநர்கள் கொண்ட குழு வடிவமைத்தது. கடும் நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் உறுதியான கட்டமைப்புடன் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். 2018 ஏப்ரல் 24 ஆம் தேதி கட்டுமான பணி தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தன. ரூ.17,843 கோடி செலவில் 6 வழிச்சாலையாக மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அடல் சேது பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 12 ஆம் தேதி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய மைல் கல் சாதனையாக அடல் சேது பாலம் உள்ளது. வளர்ந்த இந்தியா எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சியாக இது இருக்கும். எந்த தடையும் இல்லாமல் வாழ்க்கை, வாழ்வாதாரம் சீராக, வேகமாக செல்ல வேண்டும் என்பதே அடல் சேது பாலம் நமக்குக் கூறும் செய்தி என பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசி இருந்தார்.
இந்த பாலத்தில் தற்போது விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், அடல் சேது பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

பாஜக அரசின் ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்காக நாட்டின் மிக நீளமான கடல் பாலத்தை ஆய்வு செய்தோம். இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது, உயர்நீதிமன்றம் உடனடியாக கவனத்தில் எடுத்து இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் நானா படோல் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆளும் பாஜக மற்றும் மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. "விரிசல்கள் பாலத்தில் இல்லை, சர்வீஸ் சாலையில் தான் விரிசல் உள்ளது. இது பிரதான பாலத்தின் இணைப்புப் பகுதி. சிறிய விரிசல்கள் நிரப்பப்பட்டு சரி செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications