'முடிந்தால் ஆட்சியை கலைத்து பார்..என்ன நடக்கும் என அப்போ தெரியும்..' பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்
மும்பை: கடந்த மாதம் குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பிடிக்கப்பட்டதை விட்டுவிட்டு மகாராஷ்டிராவில் மட்டுமே போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதைப் போல பாஜக தலைவர்கள் கூறுவதாகச் சாடிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, முடிந்தால் அவர்கள் எனது அரசைக் கலைத்துப் பார்க்கட்டும் என்றும் சவால் விட்டுள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி ரேவ் பார்டி நடைபெறுவதாக என்சிபி எனப்படும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கப்பலில் மாறுவேடத்தில் ஏறிய போதைப் போருள் தடுப்பு பிரிவினர், கப்பல் கிளம்பியதும் அதிரடி ரெய்டை நடத்தினர். அப்போது கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவது உறுதியானது.

மும்பை போதைப்பொருள் வழக்கு
இந்தச் சம்பவத்தில் பிரபல பாலிவுட் ஸ்டார் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆரியன் கான் உட்பட 10 பேரை என்சிபி கைது செய்தது. தற்போது மும்பை சிறையில் உள்ள ஆரியன் கான் ஜாமீன் கோரி வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆரியன் கான் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் எந்தவொரு போதைப் பொருளும் இல்லை என்பதே அவரது தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்குடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் தொடர்ந்து சில ஆண்டுகளாகவே போதைப் பொருளைப் பயன்படுத்தி வருவதாகவும் கூறிய என்சிபி, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கடுமையாக எச்சரித்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குஜராத்தில் பிடிக்கப்பட்ட 3000 கிலோ ஹெராயின்
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் தாக்கரே அரசை பாஜக தலைவர்கள் கடுமையாகத் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்துள்ள உத்தவ் தாக்ரே, முடிந்தால் தனது அரசை பாஜக கலைத்துப் பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "போதைப்பொருள் மகாராஷ்டிராவில் மட்டுமா பிடிக்கப்பட்டுள்ளது? கடந்த மாதம் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இருந்து பல கோடி மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டன.

நம்மைக் குறி வைக்கிறார்கள்
என்சிபி சில கிராம் கஞ்சாவை மீட்கும்போது, எங்கள் போலீசார் ₹ 150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கைப்பற்றினர். அவர்களைப் பொறுத்தவரைப் பிரபலங்களைப் பிடிக்க வேண்டும். அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான். பாஜக உடனான கூட்டணியை முறிந்து கொண்டுவிட்டோம் என்பதற்காக சிவசேனாவையும் மகாராஷ்டிர அரசையும் அவர்கள் தொடர்ந்து குறிவைக்கின்றனர். அரசுக்குப் பிரச்சினை ஏற்படுத்த அமலாக்கத் துறையை ஏவிவிடுகின்றனர்.

இந்தத்துவாவைக்
இந்துத்துவா சித்தாந்தத்துக்கு வெளியே இருப்பவர்களால் அச்சுறுத்தல் வரவில்லை. இந்துக்களையும் இந்துத்துவாவையும் ஏணியாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தவர்களே இப்போது இந்துத்துவா கொள்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். நான் குறிப்பிடும் அந்த நபர்களும் பிரிட்டிஷ் முறையைப் போலவே பிரிவினை & ஆட்சியை அடிப்படையாக வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து இந்துத்துவாவைக் காக்க வேண்டும். இதற்காக அனைத்து மராத்திய மக்களும், இந்துக்களும் ஒன்றுபட வேண்டும்.

உத்தவ் தாக்கரே சவால்
அடுத்த மாதம் வந்தால் சிவசேனா ஆட்தி அமைத்து 2 ஆண்டுகள் முடிந்துவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். நான் சவால் விடுகிறேன். முடிந்தால், எனது ஆட்சியைக் கவிழ்த்துப் பாருங்கள். எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்பது ஆபத்தானது. பதவியும் ஒரு வித போதை தான். போதைப்பொருளுக்கு ஒருவர் அடிமையானால், அவரும் அவரது குடும்பமும் மட்டுமே அழிந்துபோவார்கள். ஆனால், பதவி போதை பிடித்தவர்கள் மற்றவர்களையும் சேர்த்து அழிப்பார்கள்.

திரிணாமுல் பாணி
இது மட்டுமில்லை அவர்கள் மும்பை போலீசாரை மாஃபியா என கூறுகின்றனர். அப்போது உபி போலீசாரை என்னவென்று அழைப்பது? சிவசேனா தொண்டர்களும் மகாராஷ்டிர மக்களும் மம்தா தலைமையிலான மேற்கு வங்க மக்களைப் போல பாஜகவை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நமது பலம் புரியும்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications