மகாராஷ்டிரா: போலீஸ் வாகனங்களில் வேட்பாளர்களுக்கு பணம்? சரத்பவார் திடுக்-பட்னாவிஸ் திட்டவட்ட மறுப்பு!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணியின் வேட்பாளர்களுக்கு போலீஸ் வாகனங்களில் பணம் விநியோகிக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். ஆனால் மகாராஷ்டிரா துணை முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. லோக்சபா தேர்தலில் மகாயுதி கூட்டணியைவிட அதிக இடங்களை மகா விகாஸ் அகாடி கைப்பற்றியது. இதனால் தற்போதைய சட்டசபை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் தற்போது தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் பாராமதியில் நேற்று செய்தியாளர்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்தார். அப்போது, போலீஸ் வாகனங்களில் ஆளும் மகாயுதி கூட்டணி வேட்பாளர்களுக்கு பாஜக பணம் விநியோகம் செய்கிறது; இதனைப் பற்றிய விரிவான தகவல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்ட போலீசாருக்குதான் சிக்கல் வரும்; ஆகையால் நான் தற்போதைய நிலையில் விரிவான விவரங்களை வெளியிட இயலாது என தெரிவித்திருந்தார். போலீஸ் வாகனங்களில் பணம் விநியோகம் நடைபெறுவதாக சரத்பவார் கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், சரத்பவாரின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், போலீஸ் வாகனங்கள் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சியில்தான் பணம் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.
மேலும் பாஜக மற்றும் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸின் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டிகளில் இருந்து விலகுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிருப்தி வேட்பாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications