என்சிபியை கைப்பற்றிய அஜித் பவார்.. சரத் பவாருக்கு புதிய கட்சி பெயரை வழங்கியது தேர்தல் ஆணையம்
மும்பை: அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், சரத்ப வாருக்கு புதிய பெயரை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த சரத் பவார் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ், சிவசேனாவை போல் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் முக்கிய கட்சியாகும்.

இந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி உடைத்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதல்வரானார். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும் அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர்.
இருதரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கியுள்ளது. அதிக ஆதரவு நிர்வாகிகள் இருப்பதால் அஜித் பவாருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதேபோல், சரத்பவார் தனக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இன்று, அஜித்பவார் தரப்புக்கு தான் இனி தேசியவாத காங்கிரஸ் கட்சி சொந்தம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் சரத்பவார் தரப்புக்கு புதிய கட்சி பெயரை வழங்கியுள்ளது. இதன்படி, இந்திய தேர்தல் ஆணையம், சரத்பவார் தரப்பிற்கு "தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்சந்திர பவார்" என்ற பெயரை வழங்கியது.












Click it and Unblock the Notifications