'உப்புமா' ஊழல் வழக்கில் நோட்டீஸ்! உத்தவ் தாக்ரே அணி வேட்பாளருக்கு கட்டம் கட்டிய அமலாக்கத்துறை
மும்பை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா தனது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. மும்பை வடமேற்கு தொகுதியில் அமோல் கிர்த்திகர் போட்டியிடுகிறார். இந்நிலையில், 'உப்புமா ஊழல் வழக்கு' குறித்து அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தல்களை பொறுத்த அளவில் மகாராஷ்டிரா மாநிலம் மிக முக்கியமானதாகும். உத்தரப் பிரதேசத்தையடுத்து இங்குதான் அதிக லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. எனவே, மத்தியில் ஆட்சியை பிடிக்க நினைப்பவர்கள் மகாராஷ்டிராவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஆனால், இந்த முறை பாஜகவுக்கு இங்கு கட்டம் சரியில்லை என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

சிவசேனாவை உடைத்து தற்போது முதலமைச்சராகியிருக்கும் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸை உடைத்து துணை முதலமைச்சராகியிருக்கும் அஜித் பவார் என இவர்கள் இருவரும்தான் இதற்கு காரணம். இவர்கள் இருவருக்குமே உத்தவ் தாக்ரே, சரத் பவார் போன்று மக்களிடையே பெரும் செல்வாக்கு இல்லாததால் தற்போது பாஜக திணறி வருகிறது. அதற்கேற்றார்போல, இந்தியா கூட்டணி கட்சிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன.
இந்நிலையில், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அணி தற்போது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இந்த வேட்பாளர் பட்டியலின்படி மும்பை வடமேற்கு தொகுதியில் அமோல் கிர்த்திகர் போட்டியிடுகிறார். தற்போது இவருக்கு 'உப்புமா ஊழல்' வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. உத்தவ் தாக்ரே அணி தற்போது வரை பாஜகவுடன் சேராததால், அந்த அணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை, பாஜக தனது விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
உப்புமா ஊழல்: கொரோனா தொற்று காலத்தில் மும்பையில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 'உப்புமா' பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. இதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் விதி மீறல் ஏற்பட்டிருக்கிறது என்றும், இதன் மூலம் சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டில் உத்தவ் தாக்ரே அணியின் தலைவர்கள் ஏற்கெனவே அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரேவுக்கு நெருங்கிய உதவியாளரான சூரஜ் சவான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல எம்பி சஞ்சய் ராவத்தின் சகோதரர் சந்தீப் ராவத்திடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருக்கிறது. இந்த வழக்கை வைத்து உத்தவ் தாக்ரே அணியை வழிக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், உத்தவ் தாக்ரே அணியின் மும்பை வடமேற்கு தொகுதி வேட்பாளர் அமோல் கிர்த்திகருக்கு தற்போது 'உப்புமா' ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications