"முஸ்லீம் கடைகளை புறக்கணிக்க வேண்டும்!" எழுந்த சர்ச்சை! பாயிண்டை பிடித்த பரூக் அப்துல்லா! பளீச் பதில்
மும்பை: மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்து சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி சில மாதங்களுக்கு முன் கவிழ்ந்தது. அங்கு சிவசேனா தாக்கரே மற்றும் ஷிண்டே தலைமையில் தனித்தனியாக இயங்கி வருகிறது.
இதனிடையே தாக்கரே தலைமையிலான சிவசேனாவினர் இன்னும் கூட என்சிபி கட்சியுடன் இணைந்து தான் பயணித்து வருகின்றனர். இரு தரப்பும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஜெயலலிதா VS ஸ்டாலின்.. யார் ஆளுமை? பேஸ்புக்கில் விவாதம் - திடீரென வந்த திமுக எம்பி அப்துல்லா கமெண்ட்
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் மும்பை அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல விரைவில் மும்பை மாநகராட்சி தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல்களில் என்சிபி மற்றும் தாக்ரேவின் சிவனசேனா இணைந்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சி
இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் என்சிபி மூத்த தலைவரான சாகன் புஜ்பாலின் 75வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் என்சிபி முக்கிய தலைவர்கள் தவிர வேறு பல தலைவர்களும் கலந்து கொண்டனர். சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தாக்கரே கலந்து கொண்டது கூட்டணி தொடர்வதையே காட்டுகிறது.
இந்திய முஸ்லீம்
அதேநேரம் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா இந்த நிகழ்ச்சியில் மத்திய பாஜக அரசு நாட்டில் உள்ள இஸ்லாமியர்களைப் பாரபட்சமாகக் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதில் பேசிய பரூக் அப்துல்லா, "நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டை ஒன்றாக வைத்திருக்க வேண்டும். நான் ஒரு முஸ்லிம், ஆனால் இந்திய முஸ்லிம். நான் ஒன்றும் சீன முஸ்லீம் இல்லை. இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்துஸ்தான்
நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமான கருத்துகள் இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றிணைந்து இருந்தால் மட்டுமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதுவே நட்பு.. எந்தவொரு நபரையும் வெறுக்க வேண்டும் என எந்த மதங்களும் போதிக்கவில்லை. இது ஹிந்துஸ்தான். இது அனைவருக்கும் சொந்தமானது" என்று அவர் பேசினார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டதில் இருந்து சுமார் ஓராண்டாக பரூக் அப்துல்லா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக எம்பி பரபர
பரூக் அப்துல்லாவின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்பி ஒருவர் இஸ்லாமியச் சமூகத்தினரை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இஸ்லாமியர்களின் கடைகளை இந்துக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
கூட்டணி கணக்கு
அதேபோல இதில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டதும் கூட்டணி குறித்த சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இரு தரப்பிற்கும் இரு வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தாக்கரே தரப்பிற்கு ஒளிரும் டார்ச் லைட் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தச் சின்னத்தைத் தான் சிவசேனா 1985 தேர்தலில் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.