Flashback: 80 மணி நேரம் மட்டுமே துணை முதல்வர் பதவி! பேக் அடித்த அஜித் பவார்! 2019ல் என்ன செய்தார்
மும்பை: மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இப்போது அஜித் பவார் பதவியேற்றுள்ளார். கடந்த 2019இல் இதேபோல ஒரு நாள் திடீரென அவர் துணை முதல்வராகப் பதவியேற்றிருந்தார். அது குறித்துப் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் 2019 அக்டோபர் 24ஆம் தேதி வெளியானது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக 105 இடங்களைக் கைப்பற்றியது.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்த் தரப்பில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றது.

மகாராஷ்டிரா: அந்த தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி அமைத்தே போட்டியிட்டது. பாஜக- சிவசேனா கூட்டணிக்கு ஆட்சியை அமைக்க போதுமான இடங்கள் இருந்தபோதிலும், அதிகார பகிர்வில் இரு தரப்பிற்கும் இடையே சிக்கல் ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு யாரை எடுத்து வருவது என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைக்க மறுத்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருந்தது.
2019இல் தேர்தல் முடிவு வந்த பிறகு சில நாட்களாகவே இந்த நிலை நீட்டித்த நிலையில், நவம்பர் 12ஆம் தேதி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. ஒரு பக்கம் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தி வந்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சரத் பவார் அறிவித்திருந்தார். அவர்கள் விரைவில் பதவியேற்பார்கள் எனக் கூறப்பட்டது.
செம ட்விஸ்ட்: அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் நவ. 23ஆம் தேதி காலை அப்போதைய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவியேற்பு விழாவை நடத்தினார். அங்கே தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது மகாராஷ்டிரா மட்டுமின்றி தேசியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இருப்பினும் என்சிபி தலைவர் சரத் பவார், பாஜகவை ஆதரிக்கும் அஜித் பவாரின் முடிவு அவரது சொந்த முடிவு என்றும் அது கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறி ஷாக் கொடுத்தார். அப்போதே என்சிபி இரண்டு பிரிவாகப் பிரிந்து இருந்தது. ஒன்று சரத் பவார் தலைமையிலும் மற்றொன்று அவரது மருமகன் அஜித் பவார் தலைமையிலும் இயங்கியது. அஜித் பவார் பாஜகவுடன் கை கோர்த்த நிலையில், அன்றைய தினமே அவர் என்சிபியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மறுநாள் சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து புதிய அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு நாள் அவகாசம் அளித்திருந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து அதே நாளில், அஜித் பவார் மற்றும் ஃபட்னாவிஸ் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அஜித் பவார் மீண்டும் சராத் பவார் பக்கமே வந்தார்.
வெறும் 80 மணி நேரம்: அதன் பின்னர சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இடையே மகா கூட்டணி அமைந்து சில ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இருப்பினும், ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் அங்கிருந்து விலகி பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்தனர். கடந்த சில மாதங்களாகவே பாஜகவுடன் அஜித் பவாரும் கை கோர்க்கலாம் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது அது நடந்துள்ளது.
கடந்த 2019இல் அஜித் பவாரால் வெறும் 80 மணி நேரம் மட்டுமே துணை முதல்வர் பதவியில் இருக்க முடிந்த நிலையில், இப்போது என்ன நடக்கும் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்












Click it and Unblock the Notifications