ஒரு பெண்ணை ஒருமுறை மட்டும் பின்தொடர்வது துன்புறுத்தல் ஆகாது, ஆதாரம் தேவை: மும்பை ஹைகோர்ட் நீதிபதி
மும்பை: பெண்ணை ஒரு முறை பின்தொடர்வது துன்புறுத்தலின் கீழ் வராது என்றும், தொடர் செயலுக்கு தான் அந்த பிரிவை பயன்படுத்த வேண்டும் என்றும் மும்பை ஹைகோர்ட் வழக்கு ஒன்றில் அறிவுறுத்தியிருக்கிறது. என்ன நடந்தது?
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டம், கட்கா பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு 14 வயதாகிறது.. கடந்த 2020 ஜனவரியில், ஆற்றுக்கு தண்ணீர் எடுத்து வர இந்த சிறுமி சென்றிருக்கிறார்.

அப்போது அதே பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் என்ற 19 வயது கூலி தொழிலாளி, சிறுமியின் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.. பிறகு சிறுமியிடம், "உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, திருமணம் செய்ய விருப்பப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமி, ஆகாஷின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆத்திரம் தாய்: அத்துடன் நடந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் வந்தும் சொல்லியிருக்கிறார்.. இதைக்கேட்டதும் ஆத்திரமடைந்த தாய், ஆகாஷை சந்தித்து, கடுமையாக எச்சரித்தார்..
இதற்கு பிறகு கடந்த 2020 ஆகஸ்ட் 26ம்தேதி, சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட ஆகாஷ், தன்னுடைய 19 வயது நண்பர் அமித் என்பவருடன் சேர்ந்து சிறுமியின் வீட்டிற்கு சென்றார். அமித்தை வீட்டுக்கு வெளியே காவலுக்கு நிறுத்திவிட்டு, உள்ளே சென்ற ஆகாஷ் சிறுமியின் வாயை பொத்தி, தகாத இடங்களில் தொட்டு தொல்லை தந்துள்ளார். இது குறித்து போலீசில் உடனடியாக புகார் தரப்பட்டது. இந்த புகாரின்பேரில் போக்சோவில் வழக்கு பதியப்பட்டது.
தீர்ப்பு: இந்த வழக்கை விசாரித்த அகோலா விசாரணை நீதிமன்றம், கடந்த 2022ல் 2 இளைஞர்களுக்கும் 7 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.. இதை எதிர்த்து 2 இளைஞர்களும், மும்பை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.. இந்த மனுவானது, நீதிபதி சனாப் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல் குற்றவாளியான ஆகாஷின் தண்டனையை நீதிபதி உறுதி செய்தார்.
பிறகு இளம் வயது காரணமாக அவரின் சிறை தண்டனையின் காலத்தையும் பாதியாக குறைத்தார். அதேபோல 2வது குற்றவாளி நேரடியாக குற்றம் செய்யாமல், வெளியே நின்றதால் அவரை விடுவித்தார்.
சட்டப்பிரிவு நீக்கம்: தொடர்ந்து நீதிபதி தன்னுடைய உத்தரவில் கூறும்போது, "இந்த வழக்கில் ஒரே ஒரு முறை மட்டுமே குற்றவாளி சிறுமியை பின் தொடர்ந்ததால், அது துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வராது. நேரடியாகவோ அல்லது, டிஜிட்டல் உபகரணங்கள் வாயிலாகவோ துன்புறுத்தியதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே இந்த சட்டப் பிரிவு பொருந்தும்" என்று கூறி வழக்கிலிருந்து அந்த பிரிவை நீக்கினார். நீதிபதியின் இந்த உத்தரவானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications