இன்னும் காவு கேட்கிறது கசாப் பாலம்.. மரண மேடையாக மாறிய மும்பை ரயில் நிலைய நடை மேம்பாலம்!
Recommended Video

மும்பை: மும்பை தாக்குதல்.. அஜ்மல் கசாப்.. ஞாபகம் இருக்கா.. அன்று கசாப் பயன்படுத்திய அதே நடை மேம்பாலம்தான் இன்றைக்கு பல உயிர்களை காவு வாங்கியுள்ளது.
சத்ரபதி ரயில் நிலைய பாலம்... 1984 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்த நடைமேடை பாலம். பழுது எதுவும் பார்க்கப்படவில்லை. போன வருஷம் பெய்த மழையில் முற்றிலும் இந்த பாலம் நாசமாகி கிடந்தது.
அதனால்தான் நேத்து ராத்திரி இந்த நடைமேடை பாலம் இடிந்து 6 பேர் அநியாயமாக உயிரிழந்து விட்டனர். மும்பை சத்ரபதி ரயில் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் ஆகியோர் தாக்குதலை முடித்துவிட்டு இந்த பாலம் வழியாகத்தான் வெளியேறித் தப்பினர் என்பது மறக்க முடியாத ஒரு சம்பவம்.

தீவிரவாதிகள்
தடை செய்யப்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் இணைந்து பயிற்சி எடுத்துக் கொண்டு 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி படகு மூலம் 10 தீவிரவாதிகள் மும்பைக்கு வந்து தாக்குதலை நடத்தினர்.

இதே பாலம்தான்
மும்பையின் தாஜ் ஓட்டல், நரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் என பல இடங்களில் இவர்கள் துப்பாக்கிசூட்டையும் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்தான் அஜ்மல் கசாப் தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டான். அதில் 58 பேர் கொல்லப்பட்டனர். எத்தனையோ பேர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து படுகாயமடைந்தனர்.

கருப்பு புள்ளி
இப்படி ஒரு பயங்கரத்தை கண்டு இந்தியா மட்டுமல்லாது உலகமே அரண்டு போனது அன்று. இன்னமும் கூட மும்பை தாக்குதல் என்பது வரலாற்றில் கருப்பு புள்ளியாக பளிச்சென இருக்கிறது. தாக்குதலை முடித்து விட்டு இதே பாலம் வழியாகத்தான் கசாப்பும், அவனது கூட்டாளியும் தப்பி வெளியேறினர். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். 58 பேரை இருவரும் சுட்டுக் கொன்றனர்.

காவு வாங்குகிறது
இறந்தவர்கள் எல்லாருமே அப்பாவிகள்... அந்த வழியாக நடந்து போய்கொண்டிருந்த பொதுமக்கள்! அதனால்தான் மும்பை மக்கள் இந்த பாலத்தை 'கசாப் பாலம்' என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். கசாப் அன்று உயிர்பலி வாங்கியது இல்லாமல், இப்போது அடுத்தடுத்த உயிர்களையும் இந்த பாலம் காவு வாங்க வருவதால் பொதுமக்கள் இன்னமும் பீதியில்தான் உள்ளனர். கசாப் மறைந்தாலும் அவனது பயங்கரம் இந்த பாலத்திலேயே தங்கிவிட்டது!












Click it and Unblock the Notifications