"டேய்.. எப்புட்றா!" பெட்ரூம் சம்பவம்! 3ஆம் தளத்தில் இருந்த தம்பதி திடீரென முதல் தளத்தில்! அடேங்கப்பா
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மூன்றாவது மாடியில் வழக்கம் போலத் தூங்கிக் கொண்டிருந்த தம்பதி திடீரென அங்கிருந்த தரை தளத்தில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல இடங்களில் தரமான கட்டுமான பொருட்களைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. செலவைக் குறைக்க வேண்டும் என்பதால் சில நேரங்களில் கட்டுமான நிறுவனங்கள் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துவதாகப் புகார்கள் உள்ளன.
அப்படியொரு சம்பவம் தான் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்துள்ளது. இதனால் மூன்றாம் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஜோடி திடீரென முதல் தளத்திற்கு விழுந்துள்ளனர். அது எப்படி நடந்தது அந்த தம்பதிக்கு என்னாச்சு? வாங்கப் பார்க்கலாம்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு மலாட் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் மூன்றாவது மாடியில் நுபா (50) மற்றும் அவரது கணவர் ஜதின் பாரிக் (58) வசித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்கள் வழக்கம் போல இரவில் தங்கள் பெட்ரூமில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அதிகாலை அதிகாலை 5:30 மணியளவில் அவர்களின் பெட்ரூம் திடீரென சரிந்து விழுந்துள்ளது. இரண்டாம் மற்றும் முதலாம் தளங்களும் இப்படியே சரிந்து விழ அவர்கள் தரை தளத்தில் வந்து விழுந்துள்ளனர்.

பெட்ரூம் சம்பவம்
முதலாம் மற்றும் இரண்டாம் தளங்களில் பெட் ரூம்களில் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல அந்த தம்பதி கீழே தரைதளத்தில் விழுந்தது அங்கு கிட்சன் இருக்கும் பகுதி. அப்போது அங்கும் யாரும் இல்லை என்பதால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அதேபோல மூன்றாம் தளத்தில் இருந்த விழுந்த இந்த தம்பதிக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை. இருவருமே சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்,

காயம்
சரியான நேரத்தில் வந்த தீயணைப்பு படையினர் அந்த ஜோடியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மனைவிக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த கணவனுக்கு ஐசியு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் நல்ல நிலையிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, ஒருவர் இவ்வளவு உயரத்தில் இருந்து விழும்போது, அவர்களுக்குப் பல எலும்பு முறிவுகள் ஏற்படும். இருப்பினும், இந்த ஜோடிக்கு அதிசயமாகப் பெரியளவில் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை..

பெரிய விரிசல்
இந்த விபத்து காரணமாகக் கட்டடத்தில் ஆழமான விரிசல் ஏற்பட்டு, அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கட்டிடத்தை உடனடியாக காலி செய்யும்படி அங்கு வசிப்போருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உதவி ஆணையர் கிரண் திகாவ்கர் கூறுகையில், "இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர உயிரிழப்பு எதுவும் இல்லை.. இருப்பினும் கட்டிடத்தில் பெரியளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அதை காலி செய்ய அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

20 குடும்பங்கள்
அதேநேரம் இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் கூட அந்த கட்டிடம் C-1 பிரிவில் சேர்க்கப்படவில்லை. இந்த பிரிவில் சேர்க்கப்பட்டால் உடனடியாக அங்குள்ளவர்கள் வெளியேற வேண்டும். இது இப்போது C2A பிரிவில் உள்ளது. அதாவது கட்டிடத்தை ரிப்பேர் செய்ய காலி செய்ய வேண்டும் என்பதே இதற்குப் பொருள். அங்கு மொத்தம் 20 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், இது அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அவர்கள் சில மணி நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

துண்டிப்பு
இது தொடர்பாக இரண்டாவது மாடியில் வேறு பகுதியில் வசிக்கும் வர்ஷா துலாஸ்கர், கூறுகையில், "நாங்கள் இந்த விபத்து நடந்த போது தூங்கிக் கொண்டிருந்தோம்.. உண்மையில் என்ன நடந்தது என்பதை உணர எங்களுக்குச் சிறிது நேரம் பிடித்தது. நாங்கள் எங்கள் வீட்டைக் காலி செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் உறவினரின் வீட்டிற்குச் செல்கிறோம்.. முக்கிய ஆவணங்கள் மற்றும் குடும்ப நகைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்கிறோம். அதேபோல டிவி, ஏசி, புக்ஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் எடுக்க முயல்கிறோம்" என்றார். அந்த கட்டிடத்திற்கான மின்சார மற்றும் குடிநீர் இணைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் கட்டிடம் இடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications