ஆபாச படம் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த ராஜ்குந்த்ரா.. சீக்ரெட் ஆபரேஷனில் சிக்கியது எப்படி?
மும்பை: ஆபாச படம் எடுத்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை மலாடு பகுதியில் ஒரு சொகுசு பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு ஆபாச படம் எடுத்து கொண்டிருந்த யாஸ்மின் ரோவா உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் நடிகை வந்தனா திவாரியும் கைது செய்யப்பட்டார்.
இந்த கும்பல் சினிமா பட வாய்ப்புகளை தேடி அலையும் மாடல்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச படங்களில் நடிக்க வைத்தது விசாரணையில் அம்பலமானது.
போலீஸார் வழக்குப் பதிவு
இதையடுத்து கைதானவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஆபாச படம் எடுத்த தயாரிப்பு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ 36 லட்சத்தையும் முடக்கினர். இந்த நிலையில் இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் தொடர்பிருப்பதை போலீஸார் அறிந்தனர்.
ராஜ்குந்த்ரா கைது
இதையடுத்து நேற்று முன் தினம் நள்ளிரவு ராஜ்குந்த்ராவை கைது செய்தனர். இவர்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்றும், இதற்கு போதிய ஆதாரம் இருப்பதையும் போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததிருந்தனர்.
சொந்த செயலி
ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை அவருக்கு சொந்தமான ஹாட்சாட்ஸ் என்ற செயலி மூலம் பதிவேற்றம் செய்து , அதை பார்க்க வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கான அளவில் சந்தா தொகை பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த செல்போன் செயலியை பிரதீப் கென்ரிவின் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
செயலியில் பதிவேற்றம்
ராஜ்குந்த்ரா ஆபாச படம் எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்ததன் மூலம் கொள்ளை பணம் சம்பாதித்தது அவரது வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மூலம் தெரியவந்தது. ஆனால் ராஜ்குந்த்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிப்ரவரி மாதமே ராஜ் குந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் எந்த விசாரணையும் இன்றி திடீரென கைது செய்தது சரியல்ல என தெரிவித்துள்ளனர்.