குடித்துவிட்டு உளறி கொட்டிய நபர்.. 30 ஆண்டுக்கு பின் இரட்டை கொலை வழக்கில் தூக்கிய போலீஸ்! என்னாச்சு
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளி இப்போது வசமாகி மாட்டியுள்ளார்.
தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உடனடியாக இல்லை என்றாலும் நிச்சயம் தவறு செய்யும் அனைவரும் போலீசாரிடம் மாட்டவே செய்வார்கள். இதற்கு உதாரணமாகப் பல சம்பவங்களை நாம் குறிப்பிடலாம்.

அப்படியொரு சம்பவம் தான் இப்போது மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை விவகாரத்தில் கொலையாளியை போலீசார் இப்போது பிடித்துள்ளனர்.
மகாராஷ்டிரா: கடந்த 1993ஆம் ஆண்டு அக். மாதம் மகாராஷ்டிரா லோனாவாலா பகுதியில் அவினாஷ் பவாரும் அவரது இரு கூட்டாளிகளும் இணைந்து அங்குள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். இதில் அந்த வீட்டில் வசித்த 55 வயது ஆணும் அவரது மனைவியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொள்ளை மற்றும் கொலையைச் செய்த போது பவாருக்கு வெறும் 19 வயதே ஆகியிருந்தது. அவர் எப்படியோ போலீசார் கண்களில் மண்ணை தூவிவிட்டு டெல்லி தப்பிச் சென்றார்.
பின்னர் அங்கிருந்து மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகருக்குக் குடிபெயர்ந்த அவர், அங்கு அமித் பவார் என்ற பெயரில் முதலில் ஓட்டுநர் உரிமம் பெற்றார். அவுரங்காபாத்தில் இருந்து, அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர் இறுதியில், மும்பையின் விக்ரோலியில் குடியேறினார். மேலும், அவர் ஓட்டுநர் உரிமத்தை வைத்து தனது புதிய பெயரில் ஆதார் அட்டையையும் பெற்றுவிட்டார்.
அரசியல்வாதி: மேலும், அங்கே ஒரு பெண்ணை பார்த்து திருமணமும் கூட செய்துவிட்டார். அவரது மனைவி அங்கே உள்ளூரில் முக்கிய அரசியல்வாதியாம். கொலை சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இவர் அதன் பிறகுத் தனது சொந்த ஊருக்குச் செல்லவே இல்லையாம். இப்போதும் அவரது தாயார் லோனாவாலா அங்கே வசித்து வரும் நிலையில், அவரை பார்க்கக் கூட பவார் ஒரு முறை கூட லோனாவாலா செல்லவில்லையாம்.
19 வயதில் இரட்டை கொலையைச் செய்த பவாருக்கு இப்போது வயது 49. போலீசாரால் தன்னை பிடிக்க முடியாது என்ற ஓவர் நம்பிக்கையில் பவார் இருந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது இரட்டை கொலை குறித்தும் கொள்ளை குறித்தும் அவர் உளறியதாகத் தெரிகிறது.
கைது: இதைக் கேட்ட சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பழைய கேஸ் பைல்களை எடுத்த போலீசார், இந்த அமித் பவார் தான் கொலை செய்த அவினாஷ் பவார் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து விக்ரோலியில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ராஜ் திலக் ரோஷன், கூறுகையில், "அவினாஷ் பவார் 30 ஆண்டுகளுக்கு முன்பு லோனாவாலாவில் நடந்த இரட்டை கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர். கொலை சம்பவம் நடந்த வீட்டின் அருகிலேயே பவார் கடை வைத்திருந்தார். தனது கூட்டாளிகளுடன் அந்த வீட்டில் உள்ளே புகுந்து கொலை மற்றும் கொள்ளையடித்துள்ளனர்.
மற்ற இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், பவார் தலைமறைவானார். தனது பெயரைக் கூட பவார் மாற்றிக் கொண்டார். இந்தச் சூழலில் தான் இப்போது அவரை கைது செய்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications