1967 முதல் பார்க்கிறேன்.. இதுவரை இப்படி நடந்ததில்லை.. மகாராஷ்டிரா ஆளுநரை கிண்டல் செய்யும் சரத் பவார்
மும்பை: ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் ஆளுநர் இனிப்பு கொடுத்தது போல் எந்த நிகழ்விலும் பார்த்ததில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு எதிராக திடீரென சிவசேனா எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினர். இறுதிவரை போராடிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பின்னர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்-ம் பதவியேற்றனர். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், 1967ம் ஆண்டு முதல் பதவியேற்பு நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன். 1972 முதல் 1990 வரை பதவியேற்று இருக்கிறேன். அப்போது எல்லாம் ஆளுநர் முதலமைச்சராக பொறுபேற்பவருக்கு பூங்கொத்து மட்டுமே வழங்குவார். ஆனால் இப்போது பூங்கொத்து கொடுப்பதற்கு முன், இனிப்புகளும் வழங்குகிறார். இதுபோன்று நான் எங்கும் பார்த்ததில்லை.
ஆளுநரின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் இருப்பதாக தெரிகிறது. 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின், மகா விகாஸ் அகாதி தலைவர்களின் பதவியேற்பு விழா நடந்தது. நானும் அந்த விழாவில் இருந்தேன். சில அமைச்சர்கள் அவர்களின் சிந்தாந்த அடிப்படையிலான சின்னங்கள் அல்லது நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பதவியேற்றனர்.
அதற்கு ஆளுநர் கோஷ்யாரி எதிர்ப்பு தெரிவித்தார். உறுதிமொழியை உரிய விதிமுறைகளின்படி எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இருப்பினும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றபோது, மறைந்த பால் தாக்கரே மற்றும் மறைந்த ஆனந்த் திகே ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.
ஆனால் ஆளுநர் கோஷ்யாரி இந்த நடைமுறையை எதிர்க்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளின் பின்னணிகளைக் கொண்ட பிரதிநிதிகள் பதவியேற்கும் போது, ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும்.
ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மாநில அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் ஆளுநரைக் கட்டுப்படுத்தும். முன்னதாக 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க முந்தைய மகா விகாஸ் அகாதி அரசு பரிந்துரை செய்தது. ஆனால், அதற்கு அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை. தற்போதைய புதிய அரசுக்கு தேவையான முடிவுகளை விரைவாக எடுப்பார் என்று கூறப்படுகிறது என்று தெரிவித்தார்.