ஒரே நாடு ஒரே தேர்தல்.. அதெப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்? மோடியை விளாசிய "இந்தியா" 'தலை'கள்!
மும்பை: மத்திய பாஜக அரசு "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு "இந்தியா" கூட்டணி தலைவர்கள் கடும் எதிர்ப்புடன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கூட்டம் நேற்றும் இன்றும் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 13 தலைவர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இடம் பெறவில்லை.

இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிய சிபிஐ தேசிய செயலாளர் டி ராஜா, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறது மத்திய அரசு. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் நாட்டின் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டாமா? அதெப்படி தன்னிச்சையாக முடிவெடுத்து அமல்படுத்த முடியும்? இந்தியாவை ஜனநாயகத்தின் தாய்நாடு என்கிறாரே பிரதமர் மோடி... இதுதான் ஜனநாயகமா? என்றார்.

உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். இதனை திசைதிருப்பும் வகையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறது மத்திய அரசு.

சிவசேனாவின் மற்றொரு தலைவரான பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், நாட்டில் விவசாயிகள் பிரச்சனை உள்ளது; வேலைவாய்ப்பின்மை முதன்மை பிரச்சனையாக இருக்கிறது. சீனாவின் ஆக்கிரமிப்பு நெருக்கடியைத் தருகிறது. இது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டியிருந்தால் பாராட்டலாம். ஆனால் இந்த முதன்மை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இப்போது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு குழு அமைத்துள்ள மத்திய அரசு, பணவீக்க விகிதம், வேலைவாய்ப்பின்மை, பெண்கள் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எப்போது குழு அமைக்குமாம்? என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications