”இந்தியா” கூட்டணி மும்பை மீட்டிங்.. 4 அஜெண்டாதான்.. பாஜக எதிர்பார்க்கும் ‘கலாட்டா’க்கள் நஹி?
மும்பை: எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்கள் மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாம். பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
"இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டம் இன்று இரவு மும்பையில் தொடங்குகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்றே மும்பை வந்துவிட்டார். மும்பையில் உத்தவ் தாக்கரே ,அமிதாப் பச்சன் ஆகியோரது வீடுகளுக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். ரக்ஷாபந்தன் என்பதால் ராக்கி கட்டியும் மகிழ்ந்தார் மமதா பானர்ஜி. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இடதுசாரி தலைவர் டி ராஜா உள்ளிட்டோரும் மும்பை வந்துவிட்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இன்று மும்பை வந்தடைகின்றனர்.
மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணியின் சின்னம் - முழக்கம் வெளியிடுவது, தலைமை செயலகத்தை எங்கு அமைப்பது?, ஒருங்கிணைப்பு குழுக்கள் மற்றும் தொகுதி பங்கீட்டை எப்படி தொடங்குவது என்கிற 4 முக்கிய அம்சங்கள் மட்டும்தான் விவாதிக்கப்பட உள்ளதாம்.
"இந்தியா" கூட்டணியில் கலகம் ஏற்படுத்தக் கூடிய "பிரதமர் வேட்பாளர்" விவகாரத்தை இப்போதே கையில் எடுத்து பாஜகவுக்கு தீனி போட வேண்டாம் என்பது சீனியர் தலைவர்களின் கருத்தாம். அத்துடன் பிரதமர் வேட்பாளர் குறித்து பொதுவெளியில் எத்தகைய கருத்துகளை தெரிவிப்ப்து என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதாவது பாஜக எதிர்பார்ப்பதைப் போல "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பெரிதாக சர்ச்சைகள், கருத்து மோதல்கள் ஏற்படாது என்கின்றன மும்பை தகவல்கள்.












Click it and Unblock the Notifications