மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உறவினர்களிடம் ஐடி ரெய்டு.. பழி வாங்குவதாக குற்றச்சாட்டு
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புனே, சதாரா, அகமதுநகர், நந்தூர்பார் மற்றும் கோலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
புனே மற்றும் கோலாப்பூரில் உள்ள அஜித் பவாரின் மூன்று சகோதரிகள், மும்பையில் உள்ள அவரது மகன் பார்த்த பவாரின் அலுவலகத்திலும் ஐடி குழுக்கள் ரெய்டு நடத்தி வருகின்றன.

அஜித் பவார்
சோதனைகளின் போது சட்டவிரோத பரிவர்த்தனைகளில் 1,050 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இது அரசியல் பழிவாங்கும் போக்கு என்று அஜித் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர்
தான் மாநிலத்தின் நிதி அமைச்சராகவும் இருப்பதாகவும் எனவே நிதி விவகாரங்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்றும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான வருமான வரியை தவறாமல் செலுத்தி வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துக்காக தனது நிறுவனங்கள் மீது சோதனை நடத்தினால் பரவாயில்லை, தனது சகோதரிகள் நிறுவனங்கள் மீது தேவையில்லாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகள் மத்திய அரசால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவசேனா குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்படுத்துவதற்காக மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாக சிவ சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மொத்தத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனைகள் அரசியல் ரீதியாக பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த சோதனைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசியல்
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு சிவசேனா மற்றும் கூட்டணி கட்சியாக இருந்த பாஜக இடையே விரிசல் ஏற்பட்டது. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டது. அதற்கு அஜித் பவார் ஒத்துழைப்பு கொடுத்தார். அவசரஅவசரமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆனால் சரத்பவார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சிவசேனா கட்சி மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேசியவாத காங்கிரஸ். ஆட்சி கைமாறியது. இதன் பிறகு மனம் மாறிய அஜீத் பவார் திரும்பி வந்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications