மமதாவை தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் சந்திரசேகர ராவ்- உத்தவ் தாக்கரேவுடன் சந்திப்பு
மும்பை: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதாவை தொடர்ந்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியை உருவாக்குவதில் தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் களமிறங்கி உள்ளார். மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை இன்று சந்திரசேகர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதில் மமதா, சந்திரசேகர ராவ் இருவரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இருவரது முயற்சிகளுக்கும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மமதா, ஸ்டாலின் முயற்சிகள்
டெல்லி, மும்பையில் ஏற்கனவே மமதா பானர்ஜி காங்கிரஸ் அல்லாத தலைவர்களை சந்தித்தார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மமதா தீவிரம் காட்டி வருகிறார். இதேபோல் நீட் தேர்வு, சமூக நீதி உள்ளிட்டவைகளில் திமுகவும் தேசிய அளவில் களமிறங்கி இருக்கிறது. அண்மையில் சமூக நீதிக் கூட்டமைப்பை தேசிய அளவில் முன்னெடுக்கும் முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

களத்தில் சந்திரசேகர ராவ்
இதேபோல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை அண்மையில் சந்திரசேகர ராவ் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். அத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார். மேலும் பாஜகவின் பி டீம் என தாம் விமர்சிக்கப்படுவதையும் அவர் கடுமையாக எதிர்த்திருந்தார். அண்மைக்காலமாக பாஜகவுக்கு எதிராக உக்கிரமாக களமிறங்கியிருக்கிறார் சந்திரசேகராவ். இதன் ஒரு கட்டமாக மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார் சந்திரசேகர ராவ். உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார்.

உத்தவ் தாக்கரேவுடன் ஆலோசனை
உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜும் உடன் இருந்தார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை எப்படி கட்டமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் சந்திரசேகர ராவ் சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு
இச்சந்திப்பு தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் சந்திரசேக ராவ் கூறியதாவது: உத்தவ் தாக்கரேவுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. தெலுங்கானா மாநிலத்துக்கு வருகை தருமாறு அவரை அழைத்திருக்கிறோம். மத்திய அரசு விசாரணை ஏஜென்சிகளை தவறான முறையில் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய அரசு தனது கொள்கையை மாற்றி கொள்ளாவிட்டால் பேரிழப்பு ஏற்படும். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.












Click it and Unblock the Notifications