'கொரோனா காலத்திலும் ஆட்சி வெறி ஏன்? மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்..' பாஜகவை விளாசும் தாக்கரே
மும்பை: கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட பாஜக ஆட்சி வெறியுடன் அலைவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மறைமுகமாகத் தாக்கி பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,மக்கள் இதுபோன்ற செயல்களை எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா முதல் அலையைப் போலவே 2ஆம் அலையிலும் மகாராஷ்டிரா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு ஊரடங்கிற்கு இணையான 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
144 உத்தரவுக்குப் பின்னரே, மாநிலத்தில் வைரஸ் பரவல் மெல்லக் குறையத் தொடங்கியது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, அங்கு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மராத்தி தினசரி செய்தித்தாளான லோக்சட்டா இதழலுக்கு ஆன்லைன் வழியாகப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பாஜகவைப் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாகத் தாக்கி பேசினார். உத்தவ் தாக்கரே கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவது தான் முக்கியம்.

ஆட்சியில் இருந்து என்ன பயன்
எதற்காக ஒருவருக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் கூறிவிட வேண்டும். இல்லையென்றால் நிச்சயமாக அவர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள், எனக்காக வாக்களித்த மக்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்துவிட்டால், ஆட்சி அதிகாரத்திலிருந்து யாருக்கு என்ன பயன்?

ஆட்சியைப் பிடிக்க முயற்சி
இதுபோன்ற கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆட்சி & பதவி வெறி பிடித்து அலைவது ஏன் என்று தெரியவில்லை. இது தேவையற்ற குழப்பத்தையும் வன்முறையையும் ஏற்படுத்தும். முதலமைச்சராவது ஒருபோதும் எனது இலக்காக இருந்ததில்லை. சிவசேனா தொண்டர் ஒருவரை முதல்வராக்குவேன் என நான் எனது தந்தை பால் தாக்கரேவுக்கு சத்தியம் செய்திருந்தேன். அந்த சத்தியத்தை என்னால் இன்னும் நிறைவேற்ற முடியவில்லை.

மோசமான காலம்
நான் ஒருபோதும் அரசியல் ஆர்வமாக இருந்ததில்லை. எனது தந்தைக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். ஆனாலும், 100 ஆண்டுகளில் இல்லாத ஒரு மோசமான பெருந்தொற்று நான் முதல்வராக இருக்கும் காலத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நான் ஒருபோதும் பொறுப்பிலிருந்து விலகியதில்லை. நிலைமையைச் சரி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கை இல்லை
2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முறிந்த பாஜகவுடனான கூட்டணியை மீண்டும் அமைய வாய்ப்புள்ளதா என்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த தாக்கரே, "பாஜக தலைவர்கள் பிரமோத் மகாஜன் மற்றும் கோபிநாத் முண்டே ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் நம்பிக்கைக்குரிய தலைவர்கள் அங்கு யாரும் இல்லை. இப்போது நாங்கள் அமைத்திருக்கும் கூட்டணி (என்.சி.பி மற்றும் காங்கிரஸ்) என்னை மரியாதையுடன் நடத்துகிறார்கள். எங்கள் கூட்டணியில் இப்போது எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை"என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications