மகா. அமைச்சரவை கூட்டத்தில் 8 சிவசேனா அமைச்சர்கள் ஆப்சென்ட்- அதிர்ச்சியில் உறைந்த உத்தவ் தாக்கரே!
மும்பை: அதிஉச்சமான அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 8 சிவசேனா கட்சியின் அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தது முதல்வர் உத்தவ் தாக்கரேவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்கின்றன மும்பை தகவல்கள்.
Recommended Video
சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சிவசேனா மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தங்கள் பக்கம் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே அணி கூறுகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே கூட்டினார். உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் தமது ராஜினாமா முடிவை அறிவிப்பார்; சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பார் உத்தவ் தாக்கரே என கூறப்பட்டது. ஆனால் இக்கூட்டத்தில் 8 சிவசேனா அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து உத்தவ் தாக்கரேவை அதிர்ச்சி அடைய வைத்ததாம்.
இதனையடுத்தே கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் அடுத்து என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பாருங்கள் என அறிவுறுத்தினாராம் உத்தவ் தாக்கரே. மேலும் இன்று மாலை அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அதில் பங்கேற்காதவர்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை பாயக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications