மகாராஷ்டிரா: 'தாவூத்' கூட்டாளியான நவாப் மாலிக் வேட்பாளரா? அஜித்பவாரை மிரட்டுதே பாஜக
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கை களமிறக்கக் கூடாது என கூட்டணிக் கட்சியான பாஜக போர்க்கொடி தூக்கி உள்ளது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான நவாப் மாலிக்கை வேட்பாளராக கூட்டணி கட்சியான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரிப்பதை ஏற்கவும் முடியாது; ஆதரிக்கவும் முடியாது என்கிறது பாஜக.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ், ஷிண்டே சிவசேனா இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுத்இப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக, தமது கூட்டணிக் கட்சியான அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் விவகாரங்களில் தலையிட்டு குடைச்சலைக் கொடுத்து வருகிறதாம். அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக், மான்கூர்டு-சிவாஜி நகர் தொகுதியில் போட்டியிட இருக்கிறாராம். அவரது மகன் சனா, அணுசக்தி நகர் தொகுதியில் களமிறங்கவும் உள்ளாராம்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் நவாப் மாலிக். இதனால் அமைச்சர் பதவியையும் இழந்தார். நவாப் மாலிக்கை கடந்த காலங்களில் பாஜக மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது. இதனால் தற்போதைய தேர்தலில் நவாப் மாலிக்குக்கு போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது என பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக மும்பை பாஜக தலைவர் ஆசிஸ் செலார் கூறுகையில், தாவூத் இப்ராகிமுடன் தொடர்பில் இருப்பவருக்கு எப்படி சீட் தர முடியும்? அப்படியே அஜித்பவார் அவரை வேட்பாளராக அறிவித்தாலும் பாஜகவின் நிலைப்பாடு வேறாகத்தான் இருக்கும்; நிச்சயம் நவாப் மாலிக்கை பாஜக ஆதரிக்காது; எதிர்க்கவே செய்யும் என்கிறார் திட்டவட்டமாக. பாஜகவின் இந்த நிலைப்பாட்டால் அஜித் பவார் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications