85 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்- மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சிக்கு குஷியை தந்த கருத்து கணிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் 85 தொகுதிகளில் வெற்றி பெறும் என அக்கட்சி நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலைவிட இரு மடங்கு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் அக்கட்சியின் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறதாம். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்த கருத்து கணிப்பை முன்வைத்து கூடுதல் தொகுதிகள் கேட்டு வருகின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் மகாராஷ்டிரா தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் என்சிபி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையும் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. பாஜக 140 முதல் 150 தொகுதிகளிலும் ஷிண்டே சிவசேனா 80, அஜித் பவார் என்சிபி 55 தொகுதிகளிலும் போட்டியிடக் கூடும்.
இதேபோல உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக ஒரு கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 85 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களில்தான் வென்றிருந்தது. ஆனால் லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 63 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கை ஓங்கி இருந்தது. தற்போது காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் நடத்திய கருத்து கணிப்பில் 85 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளதாம். இந்த கருத்து கணிப்பு முடிவின் அடிப்படையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications