"மோடி அரசு இனியும் தாங்காது.. சில மாதங்களில் சீட் கட்டு போல சரியும் பாருங்க.." அகிலேஷ் யாதவ் பேச்சு
மும்பை: மகாராஷ்டிராவில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், விரைவில் மத்திய அரசு கவிழும் என்றார். மகாராஷ்டிர தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் மட்டுமின்றி மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரும் என குறிப்பிட்ட அவர், மோடி அரசு நீண்ட காலத்திற்குத் தாக்குப்பிடிக்காது என்றும் விமர்சித்தார்.
மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே தலைமையிலான பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி ஆட்சியில் உள்ளது. அங்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவ.20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அங்கு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
அகிலேஷ் யாதவ்: இதற்கிடையே மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் என்பது அம்மாநிலத்தின் எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்றார். மேலும், மகாராஷ்டிர தேர்தலுக்குப் பிறகு மோடி அரசு கவிழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர தேர்தல்: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி களமிறங்குகிறது. அங்கு இந்தியா கூட்டணியில் தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி- காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. அவர்களுக்கு இடையே இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. அதேநேரம் சமாஜ்வாதி கட்சி சார்பில் இதுவரை 4 வேட்பாளர்களை அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே அங்குள்ள துலே என்ற நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ் அங்குத் தனது கட்சி சார்பில் இர்ஷாத் ஜஹாகிர்தார் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிர தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
சரமாரி தாக்கு: அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், "மக்கள் ஜஹாகிர்தாருக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு படித்த எம்எல்ஏவை சட்டசபைக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிராந்திய கட்சிகளை உடைத்து ஆட்சியைத் திருடுவதையே பாஜக வழக்கமாக வைத்து இருக்கிறது. இந்த முறை மகாராஷ்டிர மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
ஆட்சி கவிழும்: மகாராஷ்டிரா தேர்தல் அம்மாநிலத்தின் எதிர்காலத்தை மட்டுமின்றி, நாட்டின் அரசியலையும் நிச்சயம் மாற்றும். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தல். தேர்தல் முடிவுகளுக்குப் பின், பாஜக அரசு கவிழும்.. மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் நடந்தால் போதும்.. டெல்லியில் உள்ள மோடி தலைமையிலான மத்திய அரசும் அரசும் கவிழும். மத்திய அரசு கவிழும் போது புல்டோசர் ஆட்சி செய்யும் எங்கள் முதல்வரும் (உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்) உடன் செல்ல நேரிடும்" என்றார்.
அதாவது மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் உத்தரப் பிரதேசத்திலும் ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். மகாராஷ்டிர மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குப் படுதோல்வியைப் பரிசாகத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், டெல்லியில் உள்ள மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு காலத்தில் மகாராஷ்டிராவில் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், இப்போது மகாராஷ்டிராவில் உள்ள நிறுவனங்களைத் திட்டமிட்டு குஜராத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் பரபர புகாரை முன்வைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications