மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்.. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சீனியர்கள் கடும் அதிருப்தி
மும்பை: மகாராஷ்டிரா மகாயுதி கூட்டணி அமைச்சரவை விரிவாக்கத்தில் மூத்த தலைவர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையில் ஏராளமான புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா தேர்தலில் 3 முறை வென்ற பாஜகவின் கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு இந்த முறை அமைச்சர் பதவி தரப்படாதது தமிழர்களிடையே ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸின் அஜித்பவார் துணை முதல்வரானார்கள்.

ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்திலும் இழுபறி தொடர்ந்தது. இந்த நிலையில் நாக்பூரில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. நாக்பூரில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் 39 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
மகாயுதி கூட்டணி அமைச்சரவையில் 33 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 6 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். அனைவருக்கும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜகவின் 16 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். 3 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். சிவசேனாவுக்கு 9 கேபினட் அமைச்சர்கள், 2 இணை அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸுக்கு 8 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரையில் புதுமுகங்களுக்குதான் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 பேர் புதுமுகங்கள்; சிவசேனாவும் 6 புதுமுகங்களுக்கும் தேசியவாத காங்கிரஸும் 5 புதுமுகங்களுக்கும் அமைச்சர் பதவி கொடுத்துள்ளன.
கடந்த மகாயுதி கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலருக்கும் இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸின் சீனியர் தலைவர்கள் பலரும் பதவியை எதிர்பார்த்த நிலையில் அமைச்சரவையில் வாய்பு தரப்படவில்லை. இதனால் இந்த 3 கட்சிகளின் சீனியர் தலைவர்களும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் அமைச்சரவையில் இடம் பெற்ற புதுமுகங்களும் அவர்களது ஆதரவாளர்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா அமைச்சரவையில் மொத்தம் 43 பேர் இடம் பெறலாம். தற்போது 39 பேர் அமைச்சர்களாகி உள்ளனர். இதனால் உச்சகட்ட அதிருப்தியை வெளிப்படுத்தும் சீனியர்கள் சிலருக்கும் அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications