"சந்திரப்பூர்" அசத்தல்.. தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஃபிரிட்ஜ் இலவசம்.. விரையும் மக்கள்..!
தடுப்பூசி போட்டுக் கொண்டால் சிறப்பு பரிசு வழங்குவதாக மகாராஷ்டிரா அறிவித்துள்ளது
மும்பை: தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிவித்துள்ளது.
கொரோனாவைரஸ் பரவலை ஒழிக்க லட்சக்கணக்கான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகிறார்கள்.. அதற்கான சிகிச்சை, மருந்துகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.
இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே உலக நாடுகளுக்கு ஒரே ஆறுதலாக இருந்து வருகிறது.. அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரட்டன், பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

2வது அலை
எனினும், ஏராளமானோர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள முன்வராத நிலையில், அந்தந்த நாடுகளின் சார்பில் ஏராளமான விழிப்புணர்வுகள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. இந்தியாவிலும்கூட, தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அரசு சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது..

பரிசுகள்
அதேபோல தடுப்பூசி செலுத்தி கொண்டால், பல்வேறு சிறப்பு பரிசுகளையும், ஊக்க பரிசுகளையும் வழங்குகிறோம் என்றும் அரசுகள் அறிவித்து வருகின்றன. சில மாநிலங்களில் போனஸும், சம்பளமும் தரப்படும் என்று சொல்லப்பட்டது.. அந்த வகையில், நாட்டிலேயே கொரோனா வைரஸால், அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 74 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

உத்தரவு
இதில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் அவுரங்காபாத் 26-வது இடத்தை பெற்று பின்தங்கியுள்ளது... இந்த மாவட்டத்தில் வெறும் 55 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். அதனால், குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதே மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது..

பரிசுகள்
அதன்படி, தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் சந்திரபூர் மாநகராட்சி அறிவித்துள்ளது... நவம்பர் 12 முதல் 24ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் முதல் பரிசாக ஃப்ரிட்ஜ், 2-ம் பரிசாக வாஷிங் மெஷின், 3-ம் பரிசாக டிவியும் வழங்கப்படுகிறதாம்.. ஆறுதல் பரிசாக 10 பேருக்கு மிக்ஸர், கிரைண்டர்கள் வழங்கப்படும் என சந்திரப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications