மகாராஷ்டிரா: 'மகன்' ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்குதான் துணை முதல்வர் பதவியா? மனம் திறந்த ஏக்நாத் ஷிண்டே!
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்குதான் தர வேண்டும் என பாஜகவிடம் அடம்பிடிப்பதை மறுக்காமல், 'பேச்சுவார்த்தை' நடைபெற்று வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிராவில் புதிய அரசு டிசம்பர் 5-ந் தேதி பதவியேற்கும் என அறிவித்துவிட்ட பின்னரும் துணை முதல்வர், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீட்டில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனால் நவம்பர் 23-ந் தேதி முடிவுகள் வெளியாகி ஒருவாரத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது என அடம்பிடித்த ஏக்நாத் ஷிண்டே, பிரதமர் மோடி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்துவிட்டார். ஆனால் துணை முதல்வர், அமைச்சர் பதவிகள் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆலோசனை நடத்தினர். அப்போது, மும்பையில் மூவரும் ஆலோசனை நடத்தி முடிவெடுங்கள் என அமித்ஷா அறிவுரை வழங்கி அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில் திடீரென ஏக்நாத் ஷிண்டே மும்பையில் இருந்து சொந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார். இதனால் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியில் இருக்கிறார்; பாஜக கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போகிறார் எனவும் செய்திகள் பரவின.
இந்த பரபரப்புக்கு நடுவே இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே. அப்போது, மகனுக்கு துணை முதல்வர் பதவி கேட்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவிக்காத ஏக்நாத் ஷிண்டே, அமைச்சரவை தொடர்பாக பட்னாவிஸ், அஜித்பவாருடன் மும்பையில் ஆலோசனை நடைபெற உள்ளது. முதல்வர் பதவி குறித்து பிரதமர் மோடி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துவிட்டோம். அதுதான் எங்கள் நிலைப்பாடு. பட்னாவிஸ், அஜித்பவாருடன் மும்பையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் அனைத்தும் அறிவிக்கப்படும். தற்போது அமைச்சர் பதவிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
ஆனால் சிவசேனாவின் மூத்த தலைவர்கள் பலரும், ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யாவை முன்னிலைப்படுத்தியதால்தான் அவரது தலைமையை உதறிவிட்டு ஏக்நாத் ஷிண்டே பின்னால் வந்தோம்; தற்போது ஏக்நாத் ஷிண்டேவும் வாரிசு அரசியலை கையில் எடுத்தால் எப்படி ஏற்பது என்கின்றனர் மூத்த சிவசேனா தலைவர்கள்.












Click it and Unblock the Notifications