அஜீத் பவார் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. பிரிந்து வர இதுதான் காரணமா?
அஜீத் பவார் திடீர் பல்டிக்கு என்ன காரணமாக இருக்கும் என தெரியவில்லை
Recommended Video
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து தனியாக வந்து பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைக்கு அஜீத் பவார் தள்ளப்பட என்ன காரணம் என்ற பரபரப்பு விவாதம் றெக்கை கட்டி பறக்கிறது. மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி ஊழலில் அஜீத் பவார் சிக்கியுள்ளார்... அவர் மீது வழக்கும் பதிவாகியுள்ளது... இதுவே அவர் பாஜக பக்கம் சாய முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தும் கூட இதே குற்றச்சாட்டை வைத்துள்ளார். அமலாக்கப் பிரிவு ரூ. 25,000 கோடி கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் அஜீத் பவார் மீது வழக்குப் போட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்கு பயந்துதான் அஜீத் பவார் பாஜக பக்கம் ஓடி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ராவத். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீதும் இதே வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸுக்கு பெப்பே.. சிவசேனாவுக்கு டிமிக்கி.. அலேக்காக தேசியவாத காங்.கை உடைத்த பாஜக.. செம டிவிஸ்ட்
வங்கி கடன்
இந்த வழக்கு விவரத்தை சற்று திரும்பிப் பார்ப்போம்: கடந்த 2007 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றது. இதனால் வங்கிக்கு மிகப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. பெரும்பாலான கடன்கள் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் பொருளாதார நிலை சரியில்லை என்று தெரிந்தும் கூட அள்ளிக் கொடுத்துள்ளனர்.
கடன் தொகை
எந்தவிதமான சொத்து உத்தரவாதமும் இல்லாமல் கடன் தொகை வழங்கப்பட்டது. அதை விட முக்கியமாக இந்த சர்க்கரை ஆலைகள் பல அரசியல்வாதிகளுக்கு பின்னர் விற்கப்பட்டு விட்டன. அதாவது அரசியல்வாதிகளும், அவர்களது உறவினர்களும் இந்த சர்க்கரை ஆலைகளை பயன்படுத்தி வங்கிக் கடனைப் பெற்று மோசடி செய்துள்ளனர் என்பது குற்றச்சாட்டு.
சுரீந்தர் அரோரா
இதுதொடர்பாக நபார்டு வங்கி ஆய்வு நடத்தியது. அதில் முறைகேடு நடந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த கடன் வழங்கும் முடிவுகளுக்கு சரத் பவார், அஜீத் பவார் உள்ளிட்டோரே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதேசமயம், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து சுரீந்தர் அரோரா என்பவர் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரி மகராாஷ்டிர உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
எப்ஐஆர்
மகாராஷ்டிர உயர்நீதிமன்றம் இதை விசாரித்து பவார் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கப் பிரிவு சரத் பவார், அஜீத் பவார் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. மொத்தம் 72 பேர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
குற்றச்சாட்டு
இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு விசாரணை பாயும் என்ற நிலையில்தான் அஜீத் பவார் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளார். எனவே அமலாக்கப் பிரிவு விசாரணைக்குப் பயந்து அஜீத் பவார் மாறி விட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.