மஹாராஷ்டிரா வீட்டு வசதித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
மும்பை: மஹாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து தானேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் அவர் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், லாக்டவுன் காலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது குறித்து கடந்த வாரம் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத் போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஆலோசனை நடத்திய நிலையில், அந்த போலீஸ் அதிகாரிக்கு கொரோனா பாசிட்டிவ் என கடந்த வாரம் முடிவு வந்தது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அமைச்சருக்கு முதல்முறை நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வெளியானது.
அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்துடன் நெருக்கமான இருந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் பரஞ்சபேவுக்கும் கொரோனா பரவியிருக்குமோ என அஞ்சப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் அவ்ஹாத் நலமுடன் இருப்பதாகவும், அவருடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனோ போரில் முன் வரிசை வீரர்களான மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவலர்கள், அதிகாரிகள், என அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications